திருகோணமலையில் போதை மாத்திரைகளுடன் ஊடகவியலாளர் ஒருவர் கைது –

திருகோணமலை  மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஔவை நகர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது இவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் திருகோணமலையில் உள்ள மருந்தகம் ஒன்றில் இந்த மாத்திரைகளை கொள்வனவு செய்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேகநபரிடமிருந்து போக்குவரத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதோடு குறித்த ஊடகவியலாளர் அரச மற்றும் தனியார் ஊடகங்களில் பிரதேச செய்தியாளராக கடமையாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபரை மொறவெவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது, எதிர்வரும் 20.05.2024ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மொறவெவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews