எல்லை தாண்டும் மீனவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பேச்சுக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் அழைப்பு. எம் கே சிவாஜிலிங்கம்.

எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வு காண்பதற்கு தமிழ்நாடு வருமாறு தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று சுப்பர்மடம் பகுதியில் மீனவரகள் போராட்டத்தில் கலந்து கொண்டபின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது

 

அண்மைக் காலமாக வட பகுதி கடலிலே எங்களுடைய கடற்றொழிலாளர்கள் தங்களுடைய இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கடற்றொழில் உபகரணங்களை மாத்திரமல்ல தங்களுடைய இன்னுயிர்களையும் திறக்கின்ற நிலமை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலிருந்து எல்லை தாண்டி வருகின்ற ரோளர் பாரிய இழுவை மடி படகுகள் மோதி பாரிய சேதம் ஏற்பட்டுருக்கிறது.
இதே போல இலங்கை கடற்படையினரது படகுகளாலும் வேண்டுமென்றும் விபத்தினாலும் கொல்லப்பட்டு கரை ஒதுங்குகின்ற கடற்றொழிலாளர்களது சடலங்களால் ஒரு பதட்டமான சூழல் அதிகரித்திருக்கிறது.

வடமராட்சி மருதங்கேணி வத்திராயன் பகுதியில் இரண்டு கடற்றொழிலாளர்களது உடல்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன.இதே போன்று பருத்தித்துறை பொன்னாலை வீதியிலே சுப்பர்மடம் பகுதியிலே வீதியை மறித்து நேற்று முன்தினம் காலை 8:00 மணியிலிருந்து அவர்கள் மறியல் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.

பொலிகண்டி வரை வீதி போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை அரசாங்கம் இதை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழ மீனவர்களும், தமிழக மீனவர்களும், நடுக்கடலிலே மோதுவதை இல்லாமல் செய்ய வேண்டும். தமிழக அரசும் வட மாகாணத்திலே இருக்கக் கூடிய சங்கங்கள், உட்பட மக்கள் பிரதிநிதிகளும் பேச வேண்டும். இப்பொழுது கூட இரண்டு தினங்களுக்கு முன்னர் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பேச்சுவார்த்தை நடாத்தி இந்தமாதிரியான பதட்டங்களை குறைக்க முன்வருமாறு கேட்டிருப்பதாக எனக்கு செய்தி அனுப்பியிருக்கிறார்கள். இப்பொழுது கூட அவரது உதவியாளர் வழக்கறிஞர் ராதா கிருஷ்ணன் அவர்கள் இன்றிரவு தமிழக முதலமைச்சருடன் பேசிவிட்டு செய்தி தருவதாக சொல்லியிருக்கிறார். உடனடியாக ஒரு போர் நிறுத்தம் போல அந்த எல்லையில் இருப்பவர்கள் எல்லை தாண்டக் கூடாது. இல்லாவிட்டால் எங்களுடைய மக்கள் பட்டிணியாலும் பசியாலும் தான் பாதிக்கப்படுவார்கள். மீதி விடயங்களை பேசி ஒரு இணக்கத்தின் அடிப்படையில் தீர்வு காணப்ட வேண்டும். இலங்கை அரசு இதில் அக்கறை காட்டும் என நாங்கள் எதிர்பார்க்க முடியாது. இந்திய மத்திய அரசுக்கும் ஏனோ தானோ நிலவரம்தான். இதிலே அவன் செத்தாலும் இவன் செத்தாலும் தமிழர்கள் என்ற நிலமை இருக்கிறது.
அவர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். பொருளாதாரத்தில் பலமாக இருக்கிறார்கள். தற்போது விலை வாசி அதிகரித்திருக்கும் நிலையில் பனையால் விழுந்தவனை யானை மிரிப்பதாக உள்ளதாகவும் உடனடியாக இந்த பிரச்சினை தீர்க்க வேண்டும்.அதற்க்கான முழு முயற்சிகளை உடனடியாக எடுப்போம் என்றார் .

Recommended For You

About the Author: Editor Elukainews