எங்களுடைய நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கும் தமிழக முதல்வர் குரல் கொடுக்க வேண்டும்….!வி.மணிவண்ணன்.

தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்று தமிழக்த்தில் வசிக்கும் எமது மக்களுக்காக நற் பணிகளை ஆற்றிவரும் தமிழக முதல்வர் கௌரவ மு.க.ஸ்டாலின் அவர்கள் எங்களுடைய நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் எமது தமிழகம் வாழ் மக்களுக்காக ஆற்றிய பணிகளுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர்  வெளியிட்ட செய்திக் குறிப்பில் “இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இந்தியாவின் தமிழகத்திற்கு எமது மக்கள்  புலம்பெயர்ந்து தஞ்சம் கோரி ஏதிலிகளாக வசித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசாங்கத்தின் தரவுகளின் படி 108 முகாங்களிலும் மற்றும் முகாங்களுக்கு வெளியிலுமாக 92,978 அகதிகள் வசிப்பதாகவும்,  இதுவரை காலமும் எம் மக்கள்  பலர் அங்கு இரண்டாம் தர மக்களாக அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக முதல்வராக பதவியேற்ற திரு. மு. க. ஸ்ராலின் அவர்கள் தன்னுடைய முதலாவது வரவு செலவுத்திட்டத்திலேயே இலங்கைத் தமிழ்அகதிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் வேலைவாய்ப்புகள், கல்விக்கான உதவித்தொகைகள், மானியங்கள், வீடமைப்பு போன்ற பல திட்டங்களை முன்மொழிந்து அதற்கான நிதியையும் ஒதுக்கி வைத்திருப்பது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத்தமிழர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தந்திருக்கின்றது.

தமிழகம் வாழ் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான தமிழக முதல்வரின் தீர்மானங்களுக்கு எமது நன்றிகளை ஈழத்தமிழர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

ஒரு தமிழக முதல்வராக தமிழகத்தில் வாழ்கின்ற எங்களுடைய உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களுக்கென்றொரு அங்கீகாரத்தினை வழங்கியது போல் எங்களுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை அடைவதற்கும் தமிழகத்தில் வாழ்கின்ற எமது உறுவுகள் தமது தாய்நிலம் திரும்பி அவர்களது தாய்மண்ணில் மகிழ்ச்சியாக வாழக்கூடிய வகையில் எமக்கான அங்கீகாரத்தினை உலகப்பந்தில் பெற்றுத்தருவதற்கும் தாங்கள் செயலாற்றவேண்டும்.

தமிழகத்தினை இந்தியாவின் முன்னிலையான மாநிலமாக மாற்றும் வகையில் முதல்வர் செயற்படுகின்ற விதம் எமக்கு மகிழ்ச்சியை அளிப்பதோடு அப் பயணத்தில் வெற்றி பெற எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என்றுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews