படகிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவருக்கு சிகிச்சையளிக்க மறுப்பு! காயமடைந்தவர் மரணம், உறவினர்கள் போராட்டம்… |

யாழ் நயினாதீவு இறங்குதுறை பகுதியில் தவறி விழுந்து படுகாயமடைந்த நபருக்கு சிகிச்சையளிக்க மறுத்ததால் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து பொதுமக்கள் வைத்தியசாலை முன்பாக கூடியதால் பதற்றம் நிலவி வருகிறது. குறித்த சம்பவம் நேற்று இரவு 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் நயினாதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சிற்றம்பலம் செல்வக்குமார் (வயது-42) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

நயினாதீவு இறங்குதுறையில் நேற்று மாலை 6.30 மணிக்கு வந்தடைந்த பயணிகள் படகில் வந்திறங்கிய குறித்த நபர் நிலைதடுமாறி விழுந்துள்ளார்.

இதன்போது தலையில் பலத்த காயமடைந்துள்ளார். அவர் மதுபோதையில் இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

அவரை உடனடியாக நயினாதீவு பிரதேச மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அங்கிருந்த பணியாளர்கள் அனுமதிக்க மறுத்தனர்.

அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று சுத்தம் செய்துவிட்டு அழைத்து வருமாறு குறிப்பிட்டுள்ளனர்.

அதனால் வீட்டுக்கு அழைத்துச் சென்ற போது அதிகளவு குருதி வெளியேறிய நிலையில் குடும்பத்தலைவர் வீட்டில் உயிரிழந்துள்ளார்.

பின்னர் மருத்துவமனைக்கு அவரது சடலத்தைக் கொண்டு சென்ற ஊர் மக்கள் குடும்பத்தலைவரது உயிரிழப்பு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews