![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/05/ff-696x389-1.png)
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வெல்லாவெளி விவேகானந்தபுரம் தளவாய் பகுதியில் போரதீவுப்பற்று பிரதேசசபையினால் பராமரிக்கப்படும் கழிவுகளை சேமிக்கும் இடத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
இன்று காலை குறித்த பகுதியில் யானைகளின் பிரசன்னம் அதிகமாகயிருந்த காரணத்தினால் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளின் துணையுடன் கழிவுகளைக் கொட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் காட்டுப் பகுதியில் இருந்து யானை துரத்தி வந்த போது அங்கிருந்த வாகனங்கள் பின்னோக்கி நகர்த்தப்பட்டது.
இதன்போது வாகனங்கள் ஒன்றுடன்னொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு வாகனங்கள் கடும் சேதமடைந்துள்ளதாக பிரதேசசபை ஊழியர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து பிரதேச வனஜீவராசிகள் அலுவலக உத்தியோகத்தர்கள் வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதனை தொடர்ந்து அங்கிருந்து வனஜீவராசிகள் அதிகாரிகள் வாகன உதவியுடன் வருகைதந்து சேதமடைந்த வாகனங்களை அங்கிருந்து வெளியில் கொண்டுசென்றுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள காடுகளில் உள்ள யானைகளினால் தினமும் அச்சுறுத்தல்கள் மத்தியிலேயே கழிவு சேகரிப்பு நிலையத்தில் கழிவுகளை கொட்டிவருவதாக பிரதேசசபை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்