
கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு, ஜனநாயக போராளிகள் கட்சி தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டனியின் இணைத் தலைவருமான சி.வேந்தன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வகையில்…..
கனடாவில் அண்மையில் நடைபெற்ற மத்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் வெற்றி பெற்ற லிபரல் அரசின் அமைச்சரவை பதவியேற்பு வைபவம் கடந்த செவ்வாய்கிழமை ஒட்டாவா நகரில் நடைபெற்றது.
அதன்படி கனடாவின் புதிய மத்திய அமைச்சரவையில் பொதுப்பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சராக இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட கரி ஆனந்தசங்கரி பதவியேற்றுக்கொண்டார்.
ஹரி ஆனந்த சங்கரி அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்படுவதாவது
அண்மையில் நடைபெற்று முடிந்த கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் Scarborough – Guildwood – Rouge Park தொகுதியில் அமோக வெற்றிபெற்று, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானதுடன், இன்றையதினம் (நேற்றையதினம் புதன் கிழமை) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும் பதவியேற்றிருக்கும் தங்களுக்கு, ஈழத்தமிழர்கள் சார்பில் எனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் மன நிறைவடைகிறேன்.
பேரினவாதக் கொள்கைகலாலும் பல அடக்குமுறை ஆதிக்கத்தில் தொடர்ந்தும் சொந்த நிலத்தில் ஒடுக்கப்பட்டு வரும் நம்மவர்களான ஈழத்தமிழர்களின் நேரடி பிரதிநிதியான தாங்கள் நீங்கள் கடந்து வந்த கடினமான பாதைகளின் வெளிப்பாடாகவும் எம் மண்ணுக்காகவும் எம் இனத்தின் விடுதலைக்காகவும் உயிர் நீத்த எம் மறவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆசியுடன் உலகத் தமிழர்களுக்கு எடுத்துக்காட்டாக உலகமே வியந்து பார்க்கும் இன்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினராகவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும் பெருமிதத்தோடு பதவியேற்றுள்ளமை காலத்தின் பதிவே ஆகும்
எம் ஈழத்தமிழர்கள் விடுதலைப்போராட்டம் மௌனித்த பின்னும் பல நெருக்கடிகளை எதிர் நோக்கிய வண்ணம் உள்ளனர் அதாவது நில அபகரிப்பு மற்றும் சிங்கள குடியேற்றம் பயங்கரவாத வதைச்சட்டம் மற்றும் பொருளாதார சமூக அரசியல் நெருக்கடி என கூறிக்கொண்டே போகலாம் எமது உணர்வுகளோடு நெருக்கமான, எங்களில் ஒருவராகவே பார்க்க கூடிய வாறு இருக்கும் நீங்கள் உங்கள் இயலுமைக்கு உட்பட்ட மற்றும் உங்கள் உணர்வுகளுக்கு ஏற்றபோல் எம் ஈழ மண்ணுக்காகவும் எம் ஈழத்தமிழர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு என்றும் குரல் கொடுப்பீர்கள் என பெருநம்பிக்கையோடு, உங்களின் வெற்றிக்கான வாழ்த்துகளைக் கூறும் அதேவேளை தங்கள் பணி சிறக்க இறை ஆசிகளையும் வேண்டி நிற்கிறேன் – என்றுள்ளது.