மாகாண சபை தேர்தலை நடாத்த அழுத்தம்! – சுமந்திரன்

என்னுடைய சட்டமூலத்தை உபயோகித்து ஒரு சட்ட திருத்தத்தை உடனடியாக செய்து மாகாண சபை தேர்தலை நடத்தலாம் என்ற கருத்தை பல உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மாகாணசபை தேர்தல் நடத்தப்படும் முறை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நேற்றைய தினம் நாடாளுமன்ற தெரிவுக்குழு தேர்தல் முறை மறுசீரமைப்பு பற்றிய கூட்டம் நடைபெற்றது. இந்த தெரிவுக்குழுவிற்கு தற்போது புதிய நிதியமைச்சர் பசில் ராஜபக்சவும் நியமிக்கப்பட்டுள்ளார்.இக்கூட்டத்திற்கு அவர் வருகை தந்திருந்தார்.

இந்த குழு சந்திக்க ஆரம்பித்ததிலிருந்து மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதனை நாங்கள் சிலர் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். அதை நகர்த்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் சம்பந்தமாக ஒவ்வொரு தடவையும் பிரஸ்தாபிக்கப்படும். ஆனாலும் ஒரு சிறிய சட்ட திருத்தத்தின் மூலமாக முன்னர் இருந்த தேர்தல் முறையையே பின்பற்றி தேர்தல் நடத்த முடியும் என்ற கருத்தை நான் வெளிப்படுத்தியிருந்தேன். அதற்கான ஒரு சட்ட மூலமும் 2019 ஆம் ஆண்டு நான் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்திருந்தேன்.

அதன் அடிப்படையில் இது செய்யப்படலாம் என்ற கருத்து கூறிய போது சட்டமா அதிபருடைய ஆலோசனை பெறப்பட்டது. இறுதியாக சட்டமா அதிபரும் அந்த முறையிலும் செய்யலாம் என்ற ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்த பின்னணியிலே தான் நேற்றைய தினம் கூட்டத்திற்கு வந்திருந்த பசில் ராஜபக்ச வெகு விரைவாக மாகாண சபை தேர்தலை நடத்துவதென்று அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக அறிவித்தார்.

தங்களுக்கும் மாகாண சபை தேர்தல் நடத்த வேண்டும் என்ற தேவையும்,அழுத்தங்களும் இருப்பதாக கூறினார். இது இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வந்து சென்றதன் பின்னர் இதை கூறியுள்ளார். இது எப்படியாக இருந்தாலும் மாகாணசபை தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடாக தொடர்ச்சியாக இருந்து வந்து கொண்டிருக்கின்றது.

ஆகையினாலே என்னுடைய சட்டமூலத்தை உபயோகித்து ஒரு சட்ட திருத்தத்தை உடனடியாக செய்து மாகாண சபை தேர்தலை நடத்தலாம் என்ற கருத்தை பல உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

நான் தயாரித்திருந்த சட்ட மூலத்தை தற்போது சிறீலங்கா பொதுஜன பெரமுன செயலாளரிடம் நான் கொடுத்திருக்கின்றேன். அமைச்சரவை இது குறித்து ஆலோசித்து ஒரு முடிவெடுத்து அப்படி செய்வதாக இருந்தால் வருகின்ற நாட்களிலே அதனை வர்த்தமானியில் பிரசுரித்து ஒரு அரசாங்க வரைபாக சட்டமூலமாக அதனை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews