விடுதலைப் புலிகள் எந்தவொரு போர் குற்றங்களிலும் ஈடுபடவில்லை! – கஜேந்திரகுமார் –

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எந்தவொரு போர் குற்றங்களிலும் ஈடுபடவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று இடம்பெறும் சகல தமிழ் விரோத செயற்பாடுகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை, அதனை நிருபிக்கலாம் என்பதையே தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றோம். உண்மையான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் எந்தவொரு போர் குற்றங்களிலும் ஈடுபடவில்லை.

ஒரு முழுமையான விசாரணை நடத்தினால் அதற்கு முகங்கொடுத்து அந்த இயக்கத்தின் நற்பெயரை உறுதிப்படுத்தலாம் என்பதையும் தமிழ் இனத்தின் நற்பெயரை உறுதிப்படுத்தலாம் என்பதையுமே தொடர்ச்சியாக உறுதிப்படுத்தி வருகின்றோம்.

இவ்வாறு விசாரணை ஒன்று நடந்தால், உண்மையும் அதன் பின்னைரும் ?  வெளிப்பட்டால் எமது நியாயங்கள் உறுதிப்படுத்தப்படும். அதனையே நாம் கூறுகின்றோம்.

அத்துடன் இயக்கம் என கூறிய நபர்களை அரசாங்கம் கொலைசெய்துவிட்டது, இப்போது எங்கே சென்று அவர்களை விசாரிப்பது, இன்று விசாரிக்கப்பட வேண்டியவர்கள் பிள்ளையான், கருணா, டக்ளஸ் தேவானந்தா, சித்தார்த்தன் போன்றவர்களையே விசாரிக்க வேண்டும்.

ஆகவே விசாரணை ஒன்று நடந்தால் புலிகளின் நற்பெயர் உறுதிப்படுத்தப்படும். இயக்கம் தவறிழைத்தது என்பது சுமந்திரன் மற்றும் அவர் சார்ந்த கட்சியின் நிலைப்பாடாகும்.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், அதுமட்டும் அல்ல பயங்கரவாத தடை சட்டம் ஒன்று எந்தவொரு சட்டமும் புதிதாக கொண்டுவரவும் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.

இதனிடையே, இன்று இடம்பெறும் சகல தமிழ் விரோத செயற்பாடுகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணமாகும்.

மனித உரிமைகள் பேரவையில் கூட உள்ளக பொறிமுறையை வலியுறுத்தியுள்ள நிலையில் அதனை வரவேற்று உலகத்திற்கு சொன்னது மட்டுமல்லாது எமது மக்கள் மத்தியில் பொய்யை திணிக்க நடவடிக்கை எடுக்கின்றனர்.

மக்கள் தொடர்ந்தும் ஏமாறக்கூடாது என்பதற்காகவே மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews