மட்டக்களப்பு நகரில் மாணவன் ஒருவன் மீது தாக்குதல் நடாத்திய 3 மாணவர்கள் கைது!

மட்டக்களப்பு நகரிலுள்ள ஆண்கள் பாடசாலை ஒன்றைச் சேர்ந்த மாணவர் குழு ஒன்று இன்னோரு ஆண்கள் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவன் மீது தாக்குதல் நடாத்தியதில் அந்த மாணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்ட 3 மாணவர்களை இன்று புதன்கிழமை (2) கைது செய்துள்ளதாகவும் இரு மாணவர்கள் தலை மறைவாகியுள்ளதாகவும் மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது,

ஆண்கள் பாடசாலை ஒன்றில் க.போ.த. உயர் தரத்தில் கல்விகற்றுவரும் மாணவன் ஒருவர் அதே தரத்தில் இன்னொரு பாடசாலையில் கல்விகற்று வரும்;; மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இந்த இருவருக்கும் இடையே காதல் முறிவடைந்ததையடுத்து காதலனுடன் காதலி கதையாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் காதலி இன்னொரு பாடசாலையைச் சோர்ந்த அதே தரத்தில் கல்வி கற்றுவரும் மாணவன் ஒருவனிடம் பேசிவருவதாக காதலன் அறிந்துள்ளான்.

இதனையடுத்து சம்பவதினமான நேற்று பிற்பகல் தனது காதலியுடன் பேசிவருவதாக கூறப்படும் மாணவனை நகரிலுள்ள மாரியம்மன் ஆலையம் ஒன்றுக்கு அருகில் வருமாறு அழைத்திருந்ததையடுத்து அங்கு சைக்கிளில் சென்ற மாணவன் மீது அந்த மாணவனை அழைத்த மாணவன் தன்னுடன் கல்விகற்றுவரும் நண்பர்களான 4 மாணவர்களுடன் சேர்ந்து அவன் மீது மோட்டர்சைக்கிள் தலைகவசம் மற்றும் நக்கிள்ஸ் போன்றவற்றால் திடீரென தாக்குதல் நடாத்தியதுடன் அதனை வீடியோ எடுத்துள்ளனர்.

இதில் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த அவனை தாக்குதல் மேற்கொண்ட மாணவர் குழு வைத்தியசாலையில் கொண்டு சென்று விபத்தில் படுகாய மடைந்ததாக அனுமதித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கொக்குவில் மற்றும் நகர் பகுதியைச் சேர்ந்த 3 மாணவர்களை கைது செய்ததுடன் தாக்குதலுக்கு பயன்படுத்திய நக்கிள்ஸ் மற்றும் தாக்குகின்ற போது கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட வீடியோக்களை மீட்டுள்ளதுடன் தலைமறைவாகியுள்ள இரு மாணவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கைது செய்யப்பட்ட 3 பேரையம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews