கட்சி அரசியலுக்குள் சிக்குப்பட்டிருக்கும்  தமிழ்த் தேசியம்…..! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

தற்போதைய நெருக்கடிக்கான தீர்வைத்தேடும் அரசியலில்
தமிழ்த்தரப்பு பங்காளிகளாக இல்லை. தனித்தரப்பாக
பங்குபற்றக்கூடிய நிலை இருந்தும் ஒதுங்கியே நிற்கின்றது.

இவ்வாறு ஒதுங்கி நிற்பதற்கான காரணிகளில் கொழும்பை
அனுசரித்துச் செல்லும் அரசியல் பின்பற்றப்படுகின்றமை,
தனித்தரப்பாக பங்கு கொள்வதற்கான வாய்ப்பையும்,
முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் புரிந்து கொள்ளாமை
என்பவற்றைச் சென்ற வாரமும் , அதற்கு முதல் வாரமும்
பார்த்தோம்.
இந்த வாரம் தேர்தல் மையகட்சி அரசியலுக்குள்
தமிழ்த் தேசிய அரசியல் சிக்குப்பட்டிருக்கின்றமை என்ற
காரணியைப் பார்ப்போம்.
தேச விடுதலை அரசியலும், தேர்தலை மையமாகக்
கொண்ட கட்சி அரசியலும் ஒரே நேர்கோட்டில் செல்வது
என்பது எப்போதும் கடினமானதாகவே இருக்கும். உலகின் பல
விடுதலைப் போராட்டங்கள், ஒடுக்கு முறைக்கான
போராட்டங்கள் . இந்த அனுபவங்களைக் கொண்டுள்ளன. தேச
விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் சமூகம் தேர்தல்
மையக்கட்சி அரசியலுக்குள் புகுந்ததும் தேச விடுதலைப்
போராட்ட அரசியல் தேக்க நிலைக்கு செல்லும்.
 நீர்த்து போகும் நிலை உருவாகும். இதனால் ஒடுக்குமுறையாளர்கள் எப்போதும் தேர்தல் மையக்கட்சி அரசியலுக்குள்  போராட்டத்தை முடுக்கவே முனைவர்.
நேபாளத்தில்  மாவோஜிஸ்டுகளின் போராட்டம், ஈழத்தமிழர்கள் போராட்டம்  என்பன இதற்கு நல்ல உதாரணங்கள் ஆகும்.
 நேபாள மாவோஜிஸ்டுகள் தேர்தல் மைய கட்சி அரசியலுக்குள்
நுழைந்த பின்னர் தமது இலக்கு நோக்கிய பணயத்தை
வினைத்திறனுடன்  கொண்டு செல்ல முடியவில்லை.
இலங்கையில் ஜே.வி.பி யினருக்கும் அந்த நிலை
ஏற்பட்டுள்ளது எனலாம்.
இலங்கையில் சோசலிச அரசினை உருவாக்குவது என்பது அவர்களது நோக்கமாக இருந்த போதும் ஒரு சீர்திருத்தக்கட்சி என்பதற்கு மேல்  அதனால் மேலெழ முடியவில்லை. இந்த அனுபவத்தினாலோ என்னவோ அதிலிருந்து பிரிந்த முன்னிலை சோசலிசக்கட்சி தேர்தல்  அரசியலில் பெரிய நாட்டத்தைக் காட்டவில்லை.
இலங்கையில் இடது சாரி இயக்கம் பலவினப்பட்டமைக்கு தேர்தல்
மையக்கட்சி அரசியலுக்குள் அது மாட்டுப்பட்டமையை பல
ஆய்வாளர்கள் காரணமாகக் கூறுவதுண்டு
தமிழர் போராட்டத்தைப் பொறுத்தவரை தமிழ்த்தேசிய
அரசியலை முதன் முதலாக முன்னெடுத்த அமைப்பு
தமிழரசுக்கட்சி தான்.
 1947 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட
சோல்பரி யாப்பும், அதனைத  தொடர்ந்து வந்த 1948 இன்
சுதந்திரமும் இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரத்தை
பெரும்பான்மை ஜனநாயகம் என்ற பெயரில் சிங்கள
தேசத்திடம் ஒப்படைத்தது. தமிழ் மக்கள் ஆட்சி
அதிகாரக் கட்டமைப்பிலிருந்து தூக்கி வீசப்பட்டனர்.
இந்நிலையில்தான்  தந்தை செல்வா அதுவரை கால
தமிழ்த் தரப்பின் சமவாய்ப்பு அரசியலைக்கைவிட்டு வடக்கு –
கிழக்கு மாகாணங்களை தமிழர் தாயகமாக வரையறுத்து
அதற்கு அதிகாரத்தைக் கோருகின்ற சமஸ்டி அரசியலை
முன்னெடுத்தார்.
தாயகம் வரையறுக்கப்பட்டவுடன்  தமிழ்த்  தேசியம் தானாக வளர்ந்தது. தந்தை செல்வா  மனுக்கள்
வழங்குதல் , சட்ட மன்றத்தில் பேசுதல்  என்கின்ற தமிழர்
அரசியல் வழிமுறைகளை மக்களை இணைத்த போராட்ட
அரசியலாக மாற்றினர்.
எனினும் தந்தை செல்வாவின் பாதை தேர்தல்
மையக்கட்சி அரசியலாகவே இருந்தது. இதனால் புதிதுக்கு
போராட்டங்களை நடாத்தினாலும் அவற்றைத் தொடர
முடியவில்லை.
 தமிழரசுக்கட்சியின் பொற்காலம் என்பது 1956
தொடக்கம் 1961 வரையான 5 வருட காலப்பகுதி தான்.
இக்காலப்பகுதிக்குள் தான் காலி முகத்திடல்
சக்தியாக்கிரகப்போராட்டம் (1956), திருமலை யாத்திரை
(1956), சிங்களசிறீ எதிர்ப்பு போராட்டங்கள் (1957 – 1958),
மாவட்ட அரசாங்க செயலகங்கள் முன்னால் சத்தியாக்கிரக
போராட்டம் (1961) என்பன இடம்பெற்றன. இதற்கு பின்னர்
மக்கள் எழுச்சிப்போராட்டங்கள் என எவையும்
முன்னெடுக்கப்படவில்லை. கட்சி அரசியலினால்  தேசிய
விடுதலைக்போராட்டத்தை முன்னெடுக்க முடியாது எனக்
கருதிய இளைஞர்கள் கட்சி அரசியலுக்கு வெளியே விடுதலை
இயக்கங்களை கட்டியெழுப்ப முயற்சித்தனர். ஆயுதப்போராட்ட
வரலாறு இப்படித்தான் பரிணமித்தது.
தேர்தலை மையமாகக் கொண்ட கட்சி அரசியலின்
பிரதான நோக்கம் தேர்தலும், கதிரைகளும் தான். தேச
விடுதலைப்போராட்டம் எல்லாம் அதற்கு இரணடாம்
பட்சமானவை . இலங்கையைப் பொறுத்தவரை பெரிய தேர்தல்
,சிறியதேர்தல் குட்டித்தேர்தல் குஞ்சுத்தேர்தல் என நான்கு
வகையான தேர்தல்களாக ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத்தேர்தல், மாகாணசபைத் தேர்தல் ,
உள்ளூராட்சிசபைத் தேர்தல் என்பன உள்ளன.
போதாக்குறைக்கு கூட்டுறவுச் சங்கத் தேர்தலும் வேறு உள்ளது.
இத்தேர்தலுக்கு முகம் கொடுப்பதே கட்சிகளுக்கு பெரும்
வேலையாகி விடுகின்றது.
 நிதி, மனித வளங்களும் அதிகளவு
அதற்கு விரயமாகின்றன. தேச விடுதலை போராட்ட செயற்பாடு
என்பது மக்களை அரசியல் மயப்படுத்துதல், அமைப்பாக்குதல்,
தேச நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளுதல், ஒடுக்கு
முறைக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்களை
நடாத்துதல், வெளிவிவகாரப்பணிகளை மேற்கொள்ளல்,
உலகலாவிய வகையில் வலிமையாக இருப்பதற்காக
தாயகத்திற்கு வெளியே சேமிப்புச் சக்திகள் நட்புச சக்திகள்
என்போரை அணி திரட்டல் என பல பணிகளை வேண்டி
நிற்கின்றது. தேர்தலை நோக்கிய கட்சி அரசியலினால்
இப்பணிகளை வினைத்திறனுடன்  மேற்கொள்ள முடியாது.
எனவே இந்த விடயம் தேர்தல் மையக்கட்சி அரசியலினால்
ஏற்படுகின்ற முதலாவது பாதிப்பாகும்.
இரண்டாவது பாதிப்பு தேசமாக ஒன்று திரள்வதை தேர்தல் மையக்கட்சி அரசியல் தடுப்பதாகும். தமிழ்த்தேசிய
அரசியலின் இன்றைய நிலையைப் பொறுத்தவரை இரண்டு
பெரும் பணிகள் முக்கியமானவையாகும்.
பெரும்தேசியவாதத்திற்கு முகம் கொடுத்தல், சர்வதேச அரசியலைக் கையாளல் என்பனவே அவ் இரண்டுமாகும்.
இவ்விரண்டு பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமாயின்
தமிழ் மக்கள் வலிமையாக இருக்க வேண்டும். தேசமாக ஒன்று
திரண்டு ஒருங்கிணைந்த அரசியலைப் பின் பற்றும் போதே
வலிமை நிலையை உருவாக்க முடியும். தேர்தல்  மையக்கட்சி
அரசியல் தேசமாக ஒன்று திரள்வதையும் அதன் வழி வலிமை
நிலை பெறுவதையும் தடுக்கின்றது. இதன் வெளிப்பாட்டைக்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெளிவாககப்பார்க்கக் கூடியதாக
இருந்தது. இத்தேர்தலில் மூன்று தமிழ்த் தேசியக்கட்சிகளும்
மூன்று வகையாக நிலைப்பாடுகளை எடுத்திருந்தன.
மூன்றாவது தேர்தல் மையக்கட்சி அரசியல் ஐக்கிய
முன்னணி ஒன்றைக் கட்டியெழுப்புவதையும்
தடுக்கின்றமையாகும்.
தேசிய இன ஒடுக்கு முறை என்பது
அத்தேசிய இனத்திற்கு வெளியே இருந்து வரும் ஒடுக்கு
முறையாகும். இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தேசிய
இனத்திலுள்ள அனைவரும் ஒருங்கிணைந்து போராட
வேண்டும். ஒரு தேசிய இனத்தில் பல்வேறு பிரிவுகள்
இருக்கலாம். அதன் வழி பல்வேறு அமைப்புக்கள் தோன்றுவது
தவிர்க்கமுடியாதது.
இதனால் ஒடுக்கு முறைக்கு முகம்
கொடுப்பதற்கு பொது இலக்கு, பொதுக்கொள்கை,
அடிப்படையிலான ஐக்கிய முன்னணி அவசியமானதாகும்.
தேர்தல் மையக்கட்சி அரசியல் பொது இலக்கு  பொதுக்
கொள்கை அடிப்படையிலான ஐக்கிய முன்னணி உருவாகுவதற்கு தடையாக இருக்கின்றது.
ஐக்கிய முன்னணி சிறப்பாக செயற்பட வேண்டுமாயின்
கொள்கை உடன்பாடு, சம அந்தஸ்து, அமைப்புப் பொறிமுறை
என்பன அவசியம். தமிழ் அரசியல் வரலாற்றில் இந்தப் பண்புகளைக் கொண்ட ஐக்கிய முன்னணி
உருவாகவில்லை. மாறாக தேர்தல் கூட்டணியே உருவானது.
சம அந்தஸ்து என்ற பண்பு அறவே இருக்கவில்லை. ஒரு
கட்சியின் மேலாதிக்கம் எப்போதும் இருந்தது. இதனால் அனைத்து ஐக்கிய முன்னணிகளும் தோல்வியிலேயே முடிந்தன. தமிழர் விடுதலைக் கூட்டணி , தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பு , தமிழ் மக்கள் பேரவை, விக்கினேஸ்வரனின்
கூட்டணி, என அனைத்தும் தோல்விகளையே தழுவின.நான்காவது தேர்தல் மையக்கட்சி அரசியல் மக்களைக கூறு போடுகின்றமையாகும். இன்று தமிழ்த் தேசியப்பரப்பில்
உள்ள மக்களே கூட்டமைப்பு, முன்னணி, விக்கினேஸ்வரன்
கட்சி என மூன்று கூறுகளாக உள்ளனர். இவற்றிற்கிடையே
சண்டைகளும் அதிகம். வலைத்தளங்களை நுணுக்கமாக
அவதானித்தால்  இச்சண்டைகள் துலக்கமாகத் தெரியும்.
விமர்சனங்களுக்கும் வசைபாடல்களுக்கும் குறையே
இருக்கவில்லை பெருந்தேசிவாதத்திற்கு எதிரான எதிர்ப்பு அரசியலை விட இவர்களுக்கிடயோன எதிர்ப்பு அரசியல் அதிகம் எனலாம். இந்த கூறு போடல் ஒருங்கிணைந்த
அரசியலையும் பேரம் பேசும் அரசியலையும் வெகுவாகவே
பாதித்தது.
1975 ம் ஆண்டு தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த
பெரும்பான்மையானோர் தமிழர் விடுதலைக்கூட்டணியின்
ஆதிக்கம் காரணமாக வெளியேறி தமிழ் ஈழ விடுதலை
இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். (தற்போதைய
ரெலோ அல்ல) அவ் அமைப்பு “எரிமலை” என்ற
பத்திரிகையை நடாத்தியது. பிற்காலங்களில் ஈரோஸ்
இயக்கத்தின் மத்திய குழுவில் இருந்தவரும் கவிஞருமான
கி.பி.அரவிந்தன் என அழைக்கப்ட்ட குருநகரைச் சேர்ந்த
பிரான்சீஸ் என்பவரே அதன் ஆசிரியராக இருந்தார்.
அப்பத்திரிகை தேர்தல்கள் தமிழ் மக்களை கூறுபோடுவதால்
விடுதலை கிடைக்கும் வரை தேர்தலே வேண்டாம் எனப்
பிரச்சாரம் செய்தது.
ஐந்தாவது எதிரிகள் உள் நுழைவதற்கான
இடைவெளிகளை தேர்தல் மைய அரசியல் கட்சிகள்
உருவாக்குகின்றன. ஒருங்கிணைந்த அரசியல் நடைமுறையில்  இருப்பின் எதிரிகள் நுழைவது கடினம். கடந்த
பாராளுமன்றத்தேர்தலின் போது தமிழ்த் தேசியக்கட்சிகள் பிளவு
பட்டுப்போட்டியிட்டன. இது சிங்கள தேசத்தின் கட்சிகளும்,
சிங்கள அரசாங்க சார்புக் கட்சிகளும் கணிசமான ஆசனங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கின.
யாழ்ப்பாண மாவட்டத்தில்  அதிக விருப்பு வாக்குகளை
சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிட ட அங்கஜன்
இராமநாதனே பெற்றிருந்தார். உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் முதலாம் நிலையில் அவரே இருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க சார்புக்கட்சியைச் சேர்ந்த
பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனே அதிக
விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். வன்னியிலும் ஒரு
ஆசனம் பறிபோயிருந்தது.
ஆறாவது மிக முக்கியமானது தேர்தல் மைய அரசியல்.
தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை பலவீனப்படுத்துகின்றது.
 என்பதே அதுவாகும்.
தேசிய இன ஒடுக்குமுறைக்கான அரசியலை துண்டு துண்டாக
முனனெடுக்க முடியாது. அவ்வாறு முன்னெடுப்பின் எவருமே
அதனைக் கணக்கெடுக்க மாட்டார்கள். தமிழ் மக்கள் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனம். அது தன்
விடுதலையைப் பெற்றுக் கொள்ள அக ஆற்றல் மட்டும்
போதாது. உலகத்தமிழர் ஆதரவு, உலக முற்போக்கு
ஜனநாயகசக்திகள் ஆதரவு என்கின்ற புற ஆற்றலையும்
இணைக்கின்ற போதே வலிமையாக நின்று நெஞ்சை நிமிர்த்தி
பேரம் பேசலை மேற்கொள்ள முடியும். இந்தப்புற ஆற்றலுக்கான நிபந்தனை அக ஆற்றலை வலுவாக
வைத்திருப்பது தான். துண்டு, துண்டான அணுகுமுறையால்
ஒருங்கிணைந்த அக ஆற்றல்  சிதைக்கப்படுகின்றது. இது
சிதைக்கின்ற போது புற ஆற்றலும் கிடைக்காமல் போகின்றது.
தாயகத்தில் ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமல்
உலகத்தமிழர்களோ, உலக முற்போக்கு ஜனநாயக
சக்திகளோ எம்முடன் இணையப்போவதில்லை.
மொத்தத்தில் தேர்தல் மைய கட்சி அரசியல் தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையே சிதைக்கின்றது. இந்த
சிதைப்பைத்தடுப்பதற்கு ஒரே வழி தேர்தல் மையக்கட்சி
அரசியலுக்கு வெளியே தேசியப் பேரியக்கம் ஒன்றை
உருவாக்குவது தான்.
தேர்தலில் போட்டியிடுவது
அவசியமானதாக இருந்தால் தேசியப்பேரியக்கத்தின்
கட்டுப்பாட்டில் கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டு வரலாம்.
தமிழ்த்தேச அரசியலை தேர்தல் மைய அரசியல் கட்சிகளை
நம்பி ஒரு போதுமே ஒப்படைக்க முடியாது.
சிலர் தமிழ் மக்களிடம் தற்போது இருப்பது தேர்தல் மைய
பிரதிநிதித்துவ அரசியல் மட்டுமே எனக்கூறப்பார்க்கின்றனர்.
இது மிகவும் தவறானதாகும் சிங்கள தேசத்தின் பாராளுமன்றத்திற்கு செல்வதால் தமிழ் மக்களுக்கு எதுவும்
கிடைத்து விடப்போவதில்லை. இது மக்களிலும், மக்கள்
போராட்டங்களிலும் நம்பிக்கையற்றவர்களின் கருத்தாகும்.
ராஜபக்சாக்களின் பதவி இறக்கம் பிரதிநிதித்துவ அரசியலினால் இடம் பெறவில்லை. மக்கள்
இயக்கத்தினாலேயே சாத்தியமானது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவித்தூபி மீளக்கட்டி எழுப்பப்பட்டதையோ , கனடா மத்திய அரசாங்கம் இன அழிப்பு  தீர்மானத்தை நிறைவேற்றியமையோ, தமிழ்நாடு சட்ட மன்றம் இன அழிப்புக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையோ ஈழத்தமிழர்களின்
பிரதிநிதித்துவ அரசியல் சாததியமாக்கியிருக்கவில்லை.
தற்போதைய நிலையில்  தமிழ்த தேசியக் கீழிறக்கலைத்
தடுப்பதற்கான ஒரேயொரு கருவி உலகம் தழுவிய தேசியப்
பேரியக்கமே!

Recommended For You

About the Author: admin