நான்காவது அதிகார தூண் உருவாகியுள்ளது: கோட்டாபயவை தப்பியோட வைத்த மக்கள் புரட்சி – குமார் குணரட்னம் –

மக்களின் இறையாண்மை பலத்தை நடைமுறைப்படுத்தும் புதிய தூண் உருவாகியுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் இருக்கும் கட்சிகள் இலக்க விளையாட்டுக்களுக்கு செல்லாவது இதனை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் முன்னிலை சோசலிசக்கட்சியின் பிரதான செயலாளர் குமார் குணரட்னம் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதுவரை காணாதமக்கள் சக்தி ஒன்று செயற்பாட்டுக்கு வந்துள்ளது. இது புத்தகங்களில் இருக்கும் மக்களின் அதிகாரம் சம்பந்தமான வாக்கியமல்ல. மேடைகளில் எழுப்பும் போராட்ட கோஷமில்லை.

மக்களின் அதிகாரம் தற்போது செயற்பாட்டுக்கு வந்து பௌதீக சக்தியாக மாறியுள்ளது. மக்களின் இந்த அதிகாரம் மற்றும் பலம் காரணமாக ஜனாதிபதி நாட்டில் இருந்து தப்பியோட நேரிட்டது.

இது அவர் உத்தியோகபூர்வமாக விலகினாரா விலகவில்லையா என்ற விடயமல்ல. அரசியல் ரீதியாக அவர் செல்லுப்படியற்றவராகிவிட்டார்.

இரண்டரை வருடங்களில் அவருக்கான மக்கள் ஆதரவு இல்லாமல் போயுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. இது எமது நேரடியான அனுபவத்தின் யதார்த்தம்.

இது நாம் எதிர்பார்த்த ஒன்றல்ல, எமது கோரிக்கையும் அல்ல. இந்த பலம் உயிரோட்டமானது. நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றம் என்ற மூன்று அதிகார தூண்களுக்கு மேலதிக புதிய மக்கள் போராட்டம் அதிகார தூண் உருவாகியுள்ளது.

இது மக்களின் இறையாண்மை பலம். இந்த பலத்திற்கு பதிலளிக்காது, வளைந்து கொடுக்காது, பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்ற போர்வையில் இதுவரை விளையாடி வந்தனர்.

எனினும் தற்போது மக்களின் இறையாண்மை பலம் நேரடியாக செயற்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த பலத்தை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

சிலர் இதனை புரிந்துகொண்டுள்ளனர். மேலும் சிலர் விருப்பம் இன்றியேனும் இதனை புரிந்துகொண்டுள்ளனர். இதனால், பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் இலக்கங்களை பயன்படுத்த இடமளிக்க வேண்டாம் எனவும் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews