13 தமிழருக்கு வேண்டாம்; சமஷ்டியே தேவை! இந்தியாவுக்கு முன்னணி கடிதம்!

இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு ஈழத் தமிழ்த் தேசம் உறுதியாக செயல்பட்டு வரும் நிலையில், ஈழத் தமிழ்த் தேச மக்களின் நலன்களை பேணும் வகையில் இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தங்களை பிரயோகித்து, ஒற்றையாட்சி அரசியல் யாப்பை கொண்டு வருவதைத் தடுத்து – தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியல் யாப்பைப் பெறுவதற்கு இந்தியா உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகம் ஊடாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு,

தமிழ் மக்களின் இனப்பிரச்னைக்கான நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பாக 1987 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13ஆம் திருத்தமானது, நடைமுறைக்கு வந்தநாளிலிருந்து அது தமிழ் மக்களது இனப்பிரச்னைக்கு தீர்வு அல்ல என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் ஆரம்பத்திலிருந்தே அதனை நிராகரித்து வந்துள்ளனர். பாராளுமன்றத்தில் 13ஆம் திருத்தச் சட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட்டிருந்தபோது, தமிழர் அரசியல் அரங்கில் இயங்கிக் கொண்டிருந்த தரப்புக்கள், அந்த வரைவை பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படுவதை இந்தியா தடுக்க வேண்டும் என்று கோரி இந்திய பிரதமருக்கு எழுத்து மூலமாக தெரிவித்திருந்ததும் வரலாற்று நிகழ்வாகும்.

13ஆம் திருத்தமானது சட்ட மூலமாக நிறைவேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு கோரப்பட்டதன் நோக்கமே, 13ஆம் திருத்தமானது, தமிழ் மக்களின் தீர்வு என்னும் விடயத்தில் ஆரம்பப்புள்ளியாகக்கூட கருதப்பட முடியாது என்பதனாலேயே. எனினும், தமிழ்த் தரப்பின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், குறித்த 13ஆம் திருத்தச் சட்டமும் மாகாண சபைகள் சட்டமூலமும் நிறைவேற்றப்பட்ட பின்னர் வடக்கு, கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்றபோது, தமிழர் அரசியல் அரங்கில் இயங்கிக் கொண்டிருந்த ஓர் அமைப்பு மட்டும் 1988இல் அந்தத் தேர்தலில் போட்டியிட்டு வட, கிழக்கு மாகாண சபையிலிருந்த நிர்வாகத்தைக் கைப்பற்றியிருந்தது.

இருந்த போதிலும் இதனூடாக எதனையுமே சாதிக்க முடியாது என்ற உண்மையை அனுபவ ரீதியாக உணர்ந்தபோது, மாகாண சபையை பொறுப்பேற்றிருந்த அந்தத் தரப்புக்கூட, தாம் வகித்துவந்த மாகாண சபை அங்கத்துவத்தை இராஜிநாமா செய்து 13ஆம் திருத்தத்தை முற்று முழுதாக நிராகரித்திருந்தனர். இந்த நடவடிக்கையானது, தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில், 13ஐ முன்னிறுத்தி நகர முடியாது என்பதை நிரூபிப்பதாகவும், 13 ஆம் திருத்தமானது தமிழர்களின் இனப்பிரச்னைக்கான தீர்வு விடயத்தில் ஆரம்பப்புள்ளியாகக்கூட கருதமுடியாது என்ற யாதார்த்தத்தை மீண்டும் நிலைநாட்டுவதாகவும் அமைந்துள்ளது.

34 வருடங்களுக்கு மேலாக இந்த 13ஆம் திருத்தமும் மகாகாண சபைகளும், இலங்கை அரசியலமைப்பில் இருந்தும்கூட, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் ஒற்றையாட்சியை முற்று முழுதாக நிராகரித்தே தமது ஏகோபித்த ஆணையை வழங்கிவருகின்றனர். தமிழ்த் தேசம் அங்ககீகரிக்கப்படுகின்ற – தமிழ்த் தேசம் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை அனுபவிக்கக் கூடிய – இணைந்த வடக்கு, கிழக்கு தாயகம் பாதுகாக்கப்படுகின்ற சமஷ்டித் தீர்வையே கோரி வருகின்றார்கள்.

13ஆம் திருத்தமும் மகாண சபைகளும் கடந்த 34 வருடங்களாக நடைமுறையில் இருக்கக்கூடியதாகவே, தமிழ் மக்களின் ஆணைகளைப் பெற்றவர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் 13ஆம் திருத்தம் ஒரு பேசு பொருளாகக்கூட பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. அந்தவகையில், கணக்கிலெடுக்கப்படாத – நிராகரிக்கப்பட்ட ஒரு விடயமாகவே தமிழ்த் தேசிய அரங்கில் 13ஆம் திருத்தம் இருந்து வந்துள்ளது. தொடர்ந்தும் அவ்வாறே இருக்கிறது.

இந்நிலையிலேயே, கடந்த ஜனவரி 30ஆம் திகதி யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவிலும், மார்ச் 13ஆம் திகதி வவுனியா – தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டு திடலிலும், மக்கள் எழுச்சிப் பேரணிகள் நடைபெற்றிருந்தன. அதில், தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டு, 13ஆம் திருத்தம் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியுமல்ல, இறுதித் தீர்வுமல்ல என்பதனை ஆணித்தரமாக வெளிப்படுத்தினர். அத்துடன், ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் வேலைத் திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், இதேவேளை – தமிழ்த் தேசம் அங்ககீகரிக்கப்படுகின்ற – இணைந்த வடக்கு, கிழக்கு தாயகத்தில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்ற சமஷ்டித் தீர்வே தேவை. இத்தகைய தீர்வை அடைந்துகொள்ள இந்திய அரசும் எனைய நட்பு நாடுகளும் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்கள் உரிமைக்காக போராடி வந்த காலப்பகுதியில், அவர்கள் நாட்டைப் பிரிக்காத, சமஷ்டி தீர்வுக்குத் தயாராக இருக்கவில்லை என்றும், தனிநாட்டிற்காக மட்டுமே பிடிவாதமாக செயல்படுகின்றார்கள் என்றும் அப்பட்டமான பொய்யைக் கூறியே, ஓர் இனவழிப்புப் போருக்கு இலங்கை அரசு சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்று இனவழிப்பின் மூலமாக உரிமைப் போராட்டத்தை மௌனிக்கச் செய்திருந்தார்கள்.

போர் முடிந்த பின்னர், ஒற்றையாட்சியை நிராகரித்து, இலங்கை சட்டத்தின் பிரகாரம் நாட்டைப் பிரிக்காமல் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டித் தீர்வையே வலியுறுத்தி, தமிழ் மக்கள் அனைத்துத் தேர்தல்களிலும் தமது ஆணையை வழங்கி வந்துள்ளார்கள். இலங்கைக்கு நான்காவது புதிய அரசியல் யாப்பு ஒன்றினை கொண்டுவருவதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள, அரசாங்கம், அந்த மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து புதிய அரசியல் அமைப்பை சமஷ்டி அரசியல் யாப்பாக கொண்டுவராமல் மாறாக ஒற்றையாட்சியாக கொண்டு வருவதற்கே நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.

இந்நிலையில் இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு ஈழதமிழ்த் தேசம் உறுதியாக செயல்பட்டு வரும் நிலையில், ஈழத் தமிழ்த் தேசமக்களின் நலன்களை பேணும் வகையில், இலங்கை அரசுமீது அழுத்தங்களை பிரயோகித்து, ஒற்றையாட்சி அரசியல் யாப்பை கொண்டுவருவதைத் தடுத்து, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியல் யாப்பை கொண்டுவருவதை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் – என்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews