ஜெய்சங்கர் – பிரதமர் இணைந்து யாழ். பண்பாட்டு மையத்தை திறந்துவைத்தனர்!

இலங்கை – இந்தியாவின் நட்புறவு அடையாளமாக கட்டப்பட்ட யாழ்ப்பாண பண்பாட்டு மையம் நேற்று திங்கட்கிழமை எளிமையான முறையில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சு. ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நேற்று நண்பகல் ஒரு மணிக்கு மெய்நிகர் வழியில் திறந்து வைத்தனர்.

திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாண பண்பாட்டு பேரவையை கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்த்தனவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, கல்வியமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ். மாநகர சபை முதல்வர் வி. மணிவண்ணன், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், மதகுருமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது பல கலாசார நிகழ்வுகளும் நடைபற்றன.

இதேவேளை, தற்போது பண்பாட்டு மையம் திறந்து வைக்கப்பட்டாலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் வெகு விமர்சையாக திறந்து வைக்கப்பட்ட பின்னரே பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews