இலங்கை கடற்படைக்கு அஞ்சி வெறுங் கையுடன் வீடு திரும்பிய இராமேசுவரம் மீனவர்கள்…..!

ராமேஸ்வரம் ஜன 04,

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி 13 நாட்களுக்கு பின்பு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு போதிய மீன் வரத்து இல்லாததால் கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை இருந்து மீன்பிடிக்கச் சென்ற 68 தமிழக மீனவர்களையும் அவர்கள் சென்ற 10 படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் தடுத்து வைத்துள்ளனர.

இலங்கை சிறையில் உள்ள 68 தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 13 நாட்களாக தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதி அறிவித்தனர.; இதனையடுத்து மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை கைவிட்டனர்.

இதனையடுத்து நேற்று காலை சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

மீனவர்கள் தனுஷ்கோடி கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியுள்ளனர். மேலும் நேற்று மாலை முதல் தொடர்ந்து கடலில் வீசி வரும் சூறைக்காற்று காரணமாக படகு எல்லை தாண்டி சென்று விட்டால் இலங்கை கடற்படையினர் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மீனவர்கள் மீன் பிடிக்காமல் பெருத்த நஷ்டத்துடன் கரை திரும்பினர்.

மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீன் வரத்து இல்லாமல் கரை திரும்பியதால் படகு ஒன்றுக்கு சுமார் 70,000 முதல் 80,000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடுக்கடலில் இலங்கை கடற்படையின் பிரச்சினையின்றி மீனவர்களன் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews