தென்மராட்சி வரணியை சேர்ந்த21 வயது இளைஞனின் உயரிய செயற்பாட்டிற்கு கெளரவிப்பு!

கடந்த 9ஆம் திகதி சுமார் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதி வாய்ந்த தாலி கொடி உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் அடங்கிய கைப்பையை யாழ்.அரியாலை பஸ் தரிப்பிடத்தில் வைத்துவிட்டு உரிமையாளர் பஸ் வந்துவிட்டது என்ற பரபரப்பில் அவசரமாக ஏறும்போது, அதனை விட்டுவிட்டு பஸ் ஏறியுள்ளார்.

அன்று யாழ்ப்பாணத்தில் பிறந்தநாள் நிகழ்வு ஒன்றிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சியானீஸ் மதுசன் என்ற இளைஞனின் கண்களில் அந்தக் கைப்பை அகப்பட்டுள்ளது. எடுத்துத் திறந்து பார்த்துள்ளார். உள்ளே தாலிக்கொடி உள்ளிட்ட நகைகளைக் கண்டதும்,வெலவெலத்துப் போனவர் அக்கைப்பையை மேலும் ஆராய்ந்து அதனுள் இருந்த உரிமையாளரின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து, விடயத்தைக் கூறியதோடு , கைப்பைக்கு உரியவரின் அறிவுறுத்தலுக்கமைய யாழ்ப்பாண உறவினரிடம் நேரில் சென்று ஒப்படைத்துமுள்ளார்.

அடுத்தவர் பொருளை அடித்துப் பறிக்கும் இன்றைய உலகில்…
பேருந்தில் இருந்தோர் “பவுண் விற்கிற விலையில எடுத்தவன் தருவானா?” என்று கூறிய கூற்றுக்கெல்லாம் மறுதலையாய்,செயற்பட்ட சியானீஸ் மதுசன் அவர்களை நேரில் சென்றும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று வடவரணி கந்தசுவாமி ஆலய முன்றலில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள் குறித்த இளைஞனுக்கு பொன்னாடை போர்த்தி அவரை பாராட்டி வாழ்த்துமடல் ஒன்றையும் வழங்கி கெளரவித்தார்.

அத்துடன் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் சி.பிரபாகரன் அவர்கள் குறித்த இளைஞனுக்கு சந்தன மாலை அணிவித்து கெளரவித்தார்.அத்தோடு குலானந்த குளத்து முருகமூர்த்தி ஆலய நிர்வாக சபைத்தலைவர் குணரத்தினம் அவர்களும் இளைஞனுக்கும் அவரது தாயாருக்கும் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.

குறித்த நிகழ்வில் ஆலய குரு, வரணிப் பகுதி பாடாசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ஊர்மக்கள் ,நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டு இளைஞனை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

Recommended For You

About the Author: admin