பருத்தித்துறை நீதிமன்ற வாயில் பொலிஸாரால் ஆயத முனையில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்….!

பருத்தித்துறை நீதிமன்றுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பிராந்திய செய்தியாளர் ஒருவர் நீதிமன்றக் வாயில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து அவர் மீது துப்பாக்கியைக் காண்பித்து பொலிஸ் உத்தியோகத்தர் அச்சுறுத்தினார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை இரண்டு பேருக்கும் இடையே இணக்கத்துடன் முடிக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முயற்சித்த போதும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.


வல்வெட்டித்துறையை சேர்ந்த ஜெயச்சந்திரன் சுலக்சன் என்ற பிராந்திய ஊடகவியலாளரே பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி, அநாகரிகமாகவும் பேசியும் உள்ளார்.
பருத்தித்துறை நீதிமன்றுக்கு அருகில் உள்ள தேநீர் கடை உரிமையாளருக்கும், பருத்தித்துறை நீதிமன்ற வாயில் காவல் கடமையில் ஈடுபடும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் இடையில் முரண்பாடு நிலவி வந்துள்ளது.


இந்த நிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்ற பாதுகாப்பு கடமையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஈடுபட்டிருந்தார். அருகில் இருந்த தேநீர் கடைக்கு வருபவர்கள் கடைக்கு அருகில் தமது வாகனங்களை நிறுத்த முற்பட்ட போது, அவ்விடத்தில் வாகனங்களை நிறுத்த முடியாது எனவும் நீதிமன்ற உத்தரவு என்றும் கடைக்கு வருபவர்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையில் அந்தப் பொலிஸ் உத்தியோகத்தர் ஈடுபட்டு இருந்தார்.

கடைக்கு வந்த நபர் ஒருவர் கடைக்கு முன்பாக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தேநீர் அருந்த உள்ளே சென்ற போது, அவரிடம் வந்து மோட்டார் சைக்கிளை எடு என பொலிஸ் உத்தியோகத்தர் அநாகரிகமாக பேசி நடந்துகொண்டுள்ளார்.

அதன் போது குறித்த நபரும், இவ்விடத்தில் வாகனம் நிறுத்த தடை என எவ்வித அறிவித்தலும் இல்லை – வழமையாக இவ்விடத்தில் நாங்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்துகின்றோம் – இன்றைக்கு திடீரென வந்து நிறுத்த வேண்டாம் என அநாகரிகமாக என்னிடம் பேச முடியாது எனக் கூறியுள்ளார்.

அதனை அடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அந்நபர் , தனது கடமைக்கு இடையூறு விளைவித்தார் என கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று தடுத்து வைத்தார்.

நீதிமன்ற காவல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் , தனது கடமைகளை கைவிட்டுச் சென்றே இதனைச் செய்துள்ளார்.

அதன் பின்னர் , சிறிது நேரம் பொலிஸ் நிலையத்தில் அவரை தடுத்து வைத்த பின்னர், தாங்கள் பொலிஸ் பிணையில் விடுவிப்பதாக கூறி, அவரை விடுவித்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் அறிந்து கொண்ட ஊடகவியலாளர், அது தொடர்பில் மேலும் அறிந்து கொள்வதற்காக, குறித்த தேநீர்க் கடைக்கு சென்றுள்ளார்.

அதன்போது ஊடகவியலாளரும் கடைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்காரிடம் சம்பவம் தொடர்பில் விசாரிக்க முற்பட்ட போது, நீதிமன்ற காவல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் , அங்கிருந்து வந்து ஊடகவியலாளருடன் முரண்பட முனைந்துள்ளார்.

அதன் போது, தான் ஊடகவியலாளர் என அடையாளப்படுத்திய போது, மோட்டார் சைக்கிளை இவ்விடத்தில் நிறுத்த வேண்டாம் என நீதிமன்ற உத்தரவு என்று கூறியுள்ளார். அதற்கு , ஊடகவியலாளர் எங்கே மோட்டார் சைக்கிளை நிறுத்துவது என கேட்ட போது, பொலிஸ் நிலையத்திற்குள் நிறுத்துங்கள் என கூறியுள்ளார்.

அதனை அடுத்து அவர் பொலிஸ் நிலையத்திற்குள் மோட்டார் சைக்கிளை கொண்டு சென்று நிறுத்திய போது, கடைக்காரனுடன் கதைக்க வேண்டாம் , இங்கிருந்து செல்லுங்கள் என அச்சுறுத்தும் வகையில் கூறியுள்ளார்.

அதற்கு ஊடகவியலாளர் செவி சாய்க்காது சென்ற போது , பொலிஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்வேன் என மிரட்டியுள்ளார்.

அதற்கு ஊடகவியலாளர் தான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்திக்கிறேன் என கூறிய போது, தனது துப்பாக்கியை எடுத்து ஊடகவியலாளரை நோக்கி நீட்டி “யாருக்கும் பயப்பட மாட்டேன், பொலிஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்தவரை சுட்டேன்” என கூறுவேன் என மிரட்டியுள்ளார்.

அதன் போது அங்கு வந்த மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் , ஊடகவியலாளரை மிரட்டிய சக பொலிஸ் உத்தியோகத்தரை சமரசப்படுத்தியதுடன், ஊடகவியலாளரையும் அங்கிருந்து செல்லுமாறும் , பொறுப்பதிகாரி காங்கேசன்துறை சென்றுள்ளதாகவும், அவர் மாலை வந்த பின்னர் வந்து கதைக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் பிற்பகல் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்த பொறுப்பதிகாரி, ஊடகவியலாளரை அழைத்து சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரையும் ஊடகவியலாளரையும் சமரசப்படுத்த முயற்சித்தார்.
எனினும் சம்பவம் தொடர்பில் அறிந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடகவியலாளர் தகவலைப் பெற்றுக்கொள்ளும் உரிமையைத் தடுத்தமை மற்றும் அச்சுறுத்தியமை தொடர்பில் முறைப்பாட்டைப் பெற்றுக்கொண்டு விசாரணைகளை முன்னெடுப்பது பொலிஸாரின் கடமை என அறிவுறுத்தியது. அதனையடுத்து ஊடகவியலாளரிடம் பருத்தித்துறை பொலிஸார் முறைப்பாட்டைப் பெற்றுக்கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews