படுகொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட மாணவி விவகாரம்! சந்தேகநபர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு.

திருகோணமலை – கிண்ணியா ஆலங்கேணியை சேர்ந்த மாணவி கேதீஸ்வரன் சாமினி (வயது17) எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் கிண்ணியா ஆலங்கேணியை சேர்ந்த மாணவி கேதீஸ்வரன் சாமினி (வயது17) எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் அதே பிரதேசத்தை சேர்ந்த தேவராஜா கபில்ராஜ் மற்றும் உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்கள் கிண்ணியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இக்கொலை தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக (15)  எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கு விசாரணை எதிர்வரும் 27ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மேல் நீதிமன்றத்தில் 25.10.2021 அன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த மாணவி எரியூட்டப்பட்ட நிலையில், கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குறித்த மாணவி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு மூன்று மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தேவராஜா கபில்ராஜ் மற்றும் உருத்திரமூர்த்தி அருள் ஆகிய இரு இளைஞர்கள் திருகோணமலை சிறைச்சாலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிளில் இருந்த பெற்றோலை எடுத்து உருத்திரமூர்த்தி அருள் என்பவர் மாணவி மீது ஊற்ற தேவராஜா கபில்ராஜ் தீ வைத்ததாகவும், இக்குற்றத்தை சந்தேகநபர்களே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

கிண்ணியா ஆலங்கேணி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற உயிரிழந்த மாணவி சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews