யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் தெரிவு – பெற்றோர்கள் விடுத்துள்ள கோரிக்கை!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவு குறித்து நேற்றையதினம் பெற்றோர்கள் ஒரு ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். அவ் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2023.03.02 ஆம் திகதி தொடக்கம் எமது கல்லூரிக்கு பதில் அதிபராக நியமிக்கப்பட்ட திரு. சி. இந்திரகுமார் (SLEAS) அவர்கள் எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு அயராது உழைத்து வருகின்றார்.
முன்னைய காலத்தினை விட இவ்வதிபர் பதவியேற்ற குறுகிய காலத்தில் எங்களுடைய பிள்ளைகளின் கல்வி மற்றும் கல்விசாராச் செயற்பாடுகளில் வளர்ச்சியை ஏற்படுத்தக் காட்டிய சிறப்பான திட்டமிடலுடன் கூடிய அணுகுமுறைகள் எங்களை மகிழ்வடைய வைத்ததுடன், பெற்றோர்கள் ஆகிய எங்கள் மத்தியில் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை மிகவும் வலுவாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
அதிபர் திரு. சி. இந்திரகுமார் அவர்களை, எங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால நலனை கருத்திற் கொண்டு நிரந்தர நியமனம் வழங்குமாறு பெற்றோராகிய நாங்களும் எங்களுடைய கல்லூரியின் பழைய மாணவர்களும், எமது பாடசாலையின் பழைய மாணவராகிய கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரியிருந்தோம். இக்கோரிக்கை தொடர்பில் எதுவித அரசியல் தலையீடுகளும் கையாளப்படவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும், எங்களுடைய கோரிக்கைக்கு இணங்கவே அமைச்சர் அவர்கள், பிள்ளைகளின் எதிர்கால அடைவுகளின் நியாயங்களைச் சமூகம் சார்ந்து ஆழமாக ஆராய்ந்து செயற்படுவது எங்களுக்குப் பக்கபலமாக இருப்பது வெளிப்படையானதொன்றாகும்.
மேலும், இவ்வதிபர் தன்னலம் சாராது யாழ்ப்பாணத்தின் கல்வி மற்றும் கல்விசாரா மேம்பாட்டிற்கு பெயர்குறிப்பிட்டுக்கூறும் அளவிற்கு பாடசாலையொன்றை உருவாக்க தீவிர முயற்சி எடுத்துவருவதால் பெற்றோர் மற்றும் மாணவர் மத்தியில் இப்பாடசாலையின் பெயர் பேசுபொருள் மட்டுமன்றி, மாணவர் கற்றலுக்கான அனுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே இவற்றை இழந்து யாழ்ப்பாணக் கல்விச்சமூகத்தின் எதிர்கால வளர்ச்சியைத் தடுப்பதற்கு எடுக்கப்படும் பாதக முயற்சிகளை பெற்றோர்கள் ஆகிய எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாதென்பது வெளிப்படை உண்மையாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம் – என குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews