சிறைக்குள் மகிந்த

தரமற்ற மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு நேற்றையதினம்(29)  இடம்பெற்றது.

இச் சந்திப்பு,  30 நிமிடங்களுக்கு மேல் நடைபெற்றதாக செய்திகள் வெளியிடப்பட்டாலும், இதன் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு விடயமும் வெளியிடப்படவில்லை.

இதேவேளை தான் கைது செய்யப்பட்டதற்கு எதிராக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உயர் நீதிமன்றத்தில் நேற்றையதினம்(29) அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தாம் கைது செய்யப்பட்டு, நியாயமான காரணமின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படை மனித உரிமைகளை மீறியமைக்காக பிரதிவாதிகளிடமிருந்து 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டுமெனவும் மனுதாரர் கோரியுள்ளார்.

தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பில் மனுதாரர் கெஹலிய  ரம்புக்வெல்ல, கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி  வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகிய பின்னர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews