சிறப்பு விமானத்தில் இலங்கை வரும் சாந்தனின் உடல்..!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன், பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த 28 ஆம் திகதி  காலை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. இதற்கமைய சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இலங்கை தூதரக அனுமதி, இறப்புச் சான்று, பயண ஆவணம், உடல் பதப்படுத்துதல் சான்று ஆகியவற்றை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், நேற்றைய தினம் இரவு 10 மணியளவில் சாந்தனின் உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல் இன்றைய தினம் அவரின் சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்படவுள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் , சென்னையிலிருந்து சாந்தனின் பூதவுடல் சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

‘இன்றையதினம் சென்னையிலிருந்து காலை 9.40 மணிக்கு இலங்கை நோக்கி புறப்படும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் சிறப்பு விமானம் மூலம் சாந்தனின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

இதற்கான அனைத்து அனுமதிகளும் பெரும் சிரமத்தின் பின்னர் நேற்று பெற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், அரசாங்கம் சாந்தனின் பூதவுடலை கொண்டு செல்வதற்கான அனுமதிகளை மட்டுமே வழங்கியது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தனிப்பட்ட முறையிலே செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews