குற்றவாளியை தூக்கிலிடகோரி மக்கள் போராட்டம்

தலைமன்னார் பகுதியில் 10 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்ற  நிலையில் குறித்த சிறுமியின் வீட்டின் அருகில் நேற்று மாலை சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டிருந்தது

இச் சம்பவத்தையடுத்து, சிறுமியின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் தலைமன்னார் கிராமம் பகுதியில் தங்கியிருந்து தோட்டம் ஒன்றை பராமரிக்கும் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்

இந்த நிலையில் இன்றைய தினம்(16)  தலைமன்னார் பொலிஸார் மற்றும் soco பொலிஸார் , மன்னார் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உட்பட்ட குழுவினர் சிறுமியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்

விசாரணைகளின் பின்னர் சிறுமியின் உடலை மேலதிக பரிசோதனைக்காக பொலிஸார் கொண்டு செல்ல முற்பட்ட வேளை,  தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டத்துடன் குற்றவாளியை உடனடியாக தூக்கில் போடுமாறும் கோஷங்களை எழுப்பினர்.

அத்துடன் கொலையாளிக்கு உரிய தண்டனையை விரைவில் வழங்குமாறு கோரி  விசாரணைக்காக வருகை தந்த பதில் நீதவானிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்

நேற்றைய தினம்,  குறித்த சிறுமி மாலை தனது பாட்டியின் வீட்டில் இருந்து தாய் வீட்டிற்கு தொலைபேசியை சார்ஜ் செய்வதற்காக சென்ற நிலையிலேயே காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்த நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சிறுமியின் சடலம் உடற்கூற்றுபரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews