இளையோர்களே தமிழரின் நம்பிக்கை நட்சத்திரங்கள்! – விக்கி தெரிவிப்பு

“இளையோர்கள் எமது நம்பிக்கை நட்சத்திரங்கள். உங்களிடம் எமது மக்கள் நிறைய எதிர்பார்க்கின்றார்கள். உங்கள் செயற்பாடுகளை நிறுவன மயப்படுத்தி அறிவை ஆயுதமாகப் பயன்படுத்தி எமது விடிவுக்காக நீங்கள் நிறையவே சாதிக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்.”

இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் தாயகமான வடக்கு – கிழக்கில் காலம் காலமாக அரசுகள் மேற்கொண்டு வரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் ‘தாய்நிலம்: நில அபகரிப்பு – இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான பெருந்தொற்று’ என்ற ஆவணப் படம் நேற்று மாலை இலங்கை நேரப்படி 5.30 மணிக்கு (இலண்டன் நேரம் பிற்பகல் 1.00 மணி, டொரண்டோ மற்றும் நியுஜேர்சி நேரம் காலை 8 மணி) இணையவழியில் திரையிடப்பட்டது. அதன்பின்னர் அந்தப் படம் தொடர்பான ஆய்வு ரீதியான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பிரித்தானியா, தமிழ் நாடு மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து இளையோர்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வை நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரனுடன் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூட்டாக ஆரம்பித்துவைத்தர்கள். இதில் விக்னேஸ்வரன் எம்.பி. தலைமையுரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை அரசு போல் கொரோனா வைரஸும் எம்மைத் தலையெடுக்கவிட விருப்பமில்லை. எம்மை எப்படியாவது அடக்க வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அதுவும் இயங்கி வருகின்றது.

எனினும் கட்டுப்படுத்தல்களையும் தனிமைப்படுத்தல்களையும் மீறி நாங்கள் இன்று புகழ் மிக்க அறிஞர்களை இந்த மெய் நிகர் தொடர் கருத்தரங்கத்துக்கு வரவழைத்துப் பங்குபற்ற வைத்திருக்கின்றோமெனில் அதற்கு எமது விடா முயற்சியுடைய சோர்வற்ற இளைஞர் குழாமே பொறுப்புடையவர்கள். அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக!

இன்றைய நாள் மிகவும் முக்கியமான ஒரு நாள். இந்த நாட்டின் பூர்வீகக் குடிமக்களில் ஒன்றான தமிழ் மக்களின் வடக்கு – கிழக்கு தாயகத்தை கடந்த 70 வருடங்களாக அபகரித்துவரும் தொடர் இலங்கை அரசுகளின் செயற்பாடுகளை ஆவணப் படமாக ஆதாரபூர்வமாக ஆய்வுபூர்வமாக வெளியிடும் நாள் இது. இவ்வாவணப் படம் நில அபகரிப்பு நடக்கும் இடங்களில் வைத்தே எடுத்த படம். இதனை நாம் என்றோ செய்திருந்திருக்க வேண்டும். இது போன்ற ஆவண படங்கள் பலவற்றை நாம் வெளியிட்டிருந்திருக்க வேண்டும். ஆனால், காலம் கடந்தேனும் அவசியமும் முக்கியமுமான இந்த செயற்பாடு இன்று அரங்கேற்றம் பெறுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது.

அதேபோல், நில அபகரிப்பு எவ்வாறு ஒரு பெருந்தொற்றாக வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களைப் பீடித்து அவர்களின் இருப்பு, அடையாளம், வாழ்வு ஆகியவற்றை இல்லாமல் செய்கின்றது என்பது பற்றி விவாதிப்பதற்கு உலகின் பிரபல்யம் மிக்க கல்விமான்களும் செயற்பாட்டாளர்களும் இங்கு வந்திருப்பது மிகவும் முக்கியத்துவம் மிக்கது.

இத்தகைய சிறப்பும் முக்கியத்துவமும் மிக்க இன்றைய நிகழ்வினை என்னுடன் கூட்டாக ஆரம்பித்துவைத்து உரை ஆற்ற வந்திருக்கும் முதுபெரும் அரசியல்வாதியும் எனது பெரு மதிப்புக்கும் கௌரவத்துக்கும் உரிய முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் என்னை 2013ஆம் ஆண்டு அரசியலுக்குக் கொண்டு வந்தவருமாகிய சம்பந்தனுக்கு எனது நன்றிகளை அடுத்து தெரிவித்துக்கொள்கின்றேன்.

வடக்கு – கிழக்கின் தலைநகரம் என்று அழைக்கப்படும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சம்பந்தன், எவ்வாறு 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பின்னர் அங்கு பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களின் நிலங்கள் அரசின் குடியேற்றத்திட்டங்களினாலும் வன்முறைகளினாலும் பறிக்கப்பட்டு இன்று அவர்களின் இருப்பு கேள்விக்குறியாகும் நிலையில் இருக்கின்றது என்பதற்கு ஆதாரமாக விளங்குகின்றார். 1956 ஆம் ஆண்டு முதல் சாத்வீக வழியில் தமிழர் தாயகத்தின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிவரும் சம்பந்தன், இன்றைய நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து இங்கு கலந்துகொண்டிருப்பது சிறப்பானது. அவருக்கு மீண்டும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்றைய தினம் ஆவண படம் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட இருக்கும் இளையோர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும். நீங்கள் தான் எமது நம்பிக்கை நட்சத்திரங்கள். உங்களிடம் எமது மக்கள் நிறைய எதிர்பார்க்கின்றார்கள். உங்கள் செயற்பாடுகளை நிறுவன மயப்படுத்தி அறிவை ஆயுதமாகப் பயன்படுத்தி எமது விடிவுக்காக நீங்கள் நிறையவே சாதிக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள்” – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews