4 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையின் சாராம்சம்…!

கௌரவ சபாநாயகர் அவர்களே !
கடந்த 2023 டிசெம்பர்  04 ம் திகதி வரவு செலவுத்திட்டத்தின் நீதியமைச்சு தொடர்பான குழுநிலை விவாததத்தில் நான் கலந்துகொண்டு உரையாற்றிய விடயங்கள் தொடர்பாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ பாராளுமன்றில் அறிக்கையிட்டிருந்தார். அவரது பேச்சில் குறிப்பாக என்னை ஒரு இனவாதியாகவும், எனது தந்தையை ஒரு முற்போக்குவாதியாகவும், இந்த சபையின் முன்னாள் உறுப்பினராக இருந்த எனது பாட்டனாரை ஒரு இனவாதியாகவும், சித்தரித்திருந்தார். அதில் என்னுடைய பாட்டனார் கம்பொலயில்  ஆற்றிய உரையில் சிங்கள மக்களை அவமதித்தும், அவர்களைக் கீழ்த்தரமாகவும் கூறியதாகவும் கூறி அவரை ஒரு இனவாதியாக காட்டிக்கொள்வதற்காக தனது கருத்தை முன்வைத்திருந்தார். 40 வருட அவருடைய அரசியல் வரலாற்றிலே ஒரே சம்பவத்தை மட்டுமே குறிப்பிட்டு  அவரை ஒரு இனவாதியாக காட்ட நீதியமைச்சர் முயன்றிருக்கிறார். எந்தளவு தூரத்துக்கு அவர் கூறிய கருத்து உண்மையாக இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை.
அதேபோன்று சிங்களவர்களுக்கு எதிரான இனவாதத்தை ஒருபக்கம் காட்டிக்கொண்டு, இந்திய இலங்கை பிரஜா உரிமை சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டு 690000 மலையக மக்களுடைய பிரஜாவுரிமையைப் பறிப்பதற்கு அமைச்சுப் பதவியைப்பெற்று ஆதரவளிக்கத் தயங்காதவராகவும் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தவராகதான் ஜி.ஜி.பொன்னம்பலம் இருந்தவர்; என்றும் அவருடைய பேரானாக அவரைப்போலவே இனவாதத்தை கக்குகின்ற ஒருவராக நான் இருக்கின்றேன் என்றும் நீதியமைச்சர் தெரிவித்திருந்தார்.
ஒரு நீதியமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஸ என்னுடைய பாட்டனார் தொடர்பாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற நிலையில் – சட்டத்தை விளங்கிக் கொண்டும் சரியான தகவல்களோடு முன்வைக்க முடியாமல் தத்தளிக்கிறார்.
மலையக மக்களுடைய பிரஜா உரிமையை பறித்த சட்டம் இலங்கை பிரஜா உரிமைச்சட்டம் 1948ம் ஆண்டு 18 ஆம் இலக்க சட்டம். அந்த சட்டம் மலையக மக்களுடைய பிரஜா உரிமையை எப்படி பறித்ததென்றால் –
இரண்டு சந்ததிகளுக்கு பின்னுக்கு சென்று அவர்கள் நிரந்தரமாக இந்தத் தீவிலே வாழ்ந்ததாக நிரூபிக்க வேண்டியதொரு நிபந்தனையை இட்டதால் – மலையக மக்களுக்கு அதனை உறுதிப்படுத்த முடியாமல் இருந்த காரணத்தினால் அவர்களது பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. அந்த இலங்கை பிரஜா உரிமை சட்டம் 1948ஆம் ஆண்டு 18 வது சட்டத்தை தமிழ்க் காங்கிரஸ் முற்றாக எதிர்த்திருந்தது. ஜி.ஜி.பொன்னம்பலமும் அதை எதிர்த்திருந்தார். இதை நிரூபிப்பதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய வெள்ளி மலரின் கட்டுரை ஒன்றின் ஊடாக நிரூபிக்க விரும்புகின்றேன். அந்தக் கட்டுரையை ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பரம விரோதியாக அன்று அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகவும் இந்த சபையில் செயற்பட்டிருந்த திரு.அமிர்தலிங்கம் அவர்களே எழுதியிருந்தார். அந்த ஆவணத்தை இங்கே பதிவு செய்வதோடு, அதனை ஆவணப்படுத்துவதற்கும் இந் சபைக்கு சமர்ப்பிக்கின்றேன்.
அதில்
‘‘ தமிழ் காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேருவதற்கு முன்பே டி.எஸ்.சேனனாயக்க அரசாங்கம் இலங்கை பிரஜா உரிமை சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. தமிழ்க் காங்கிரஸ் சார்பில் திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களும் திரு.சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்களும் சட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 ஜி.ஜி பொன்னம்பலத்தின் பரம விரோதியாக செயற்பட்ட ஒருவரே இதை எழுதியுள்ளார்.  இலங்கை பிரஜாவுரிமையை பறித்த சட்டத்தை ஜி.ஜி.பொன்னம்பலம் எதிர்த்தார் என்பதை அதில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவத்தின் நிலை இவ்வாறிருக்க, ஒரு நீதியமைச்சர் என்று சொல்லக்கூடிய விஜயதாச ராஜபக்ஸ இந்த சபையை பிழையாக வழிநடத்துவதற்காக அப்பட்டமான பொய்களையும் கூறியிலுருக்கிறார்.
அதற்கு பின்னர் டி.எஸ்.சேனநாயக்க சிங்களம் அல்லாத ஏனைய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பிய போது, காங்கிரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அந்த பேச்சுவார்த்தைகளிலே மலையக மக்களுடைய பறிக்கப்பட்ட பிரஜா உரிமை சட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்று  தமிழ்க் காங்கிரஸ் ஒரு நிபந்தனை விதித்திருந்தது. இதற்கு டி.எஸ்.சேனநாயக்க, தான் அதனை வாபஸ் பெற முடியாது, ஆனால் புதிய சட்டத்தைக் கொண்டு வந்து இந்த மலையக மக்களுக்கு பிரஜா உரிமையை வழங்குவதற்குரிய நடவடிக்கைகயை எடுப்பதாகக் கூறியிருந்தார். அந்தப் பேச்சுவார்த்தைகள் ஊடாக இந்திய – பாக்கிஸ்தானிய பிரஜா உரிமைச்சட்டம் 1949 ஆம் ஆண்டு இல 3 சட்டத்தை கொண்டு வருவதற்கு இணங்கினார். அந்த சட்டத்தில் இந்திய பாக்கிஸ்தானிய மக்கள் 10 வருடங்கள் இலங்கையில் தொடர்ந்து வாழ்ந்ததாக நிரூபிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பிரஜா உரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் பேச்சுவாத்தைகளுடாக அந்த கால எல்லையையும் குறைத்து தனிநபர் 10வருடங்களாகவும், குடும்பம் 7 வருடங்களாகவும் இருந்ததாக நிரூபிக்கும் பட்சத்திலே இலங்கை பிரஜா உரிமையை பெறுவதற்கான தகுதியைப் பெறுவார்கள் என்ற வகையிலே மாற்றியமைக்கப்பட்டது. ஆயினும் இந்தக் கால எல்லையை 5 வருடங்களாக குறைக்க வேண்டும் எனக் கேட்டும் டி.எஸ்.சேனநாயக்க அந்தக் கோரிக்கையை மறுத்திருந்தார். இந்த பேச்சுவார்த்தைகளில் ஆரம்பத்திலிருந்து தலையிட்டு தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்த ஜவர்கலால் நேரு டி.எஸ்.சேனநாயக்க இதற்கு கீழ் இறங்கி வரப்போவதில்லை ஆகவே, 85 வீதமான மலையக மக்களுடைய பிராஜாவுரமையை இதன்மூலம் பெற்றுக்கொண்டு ஏனையவற்றை பின்னர் பெற்றுக்கொள்ளலாம் என்று கேட்டதற்கிணங்கவே தமிழ்க் காங்கிரஸ் இந்தியா – பாக்கிஸ்தானிய பிரஜாவுரிமை சட்டத்துக்கு ஆதரவை வழங்கினார்கள். மலையக மக்களுக்கு பிரஜாவுரிமையை வழங்கும் சட்டத்துக்குதான் ஆதரவை வங்கினரே தவிர பிரஜாவுரிமையை பறிப்பதற்கான சட்டத்தை காங்கிரஸ் எதிர்த்தே வாக்களித்திருந்தது.
 1949 ஆம் ஆண்டு 3 வது இந்திய பாக்கிஸ்தானிய பிரஜா உரிமை சட்டத்தை தமிழ்க் காங்கிரஸ் ஆதரித்ததன் காரணமாகதான் மலையக் மக்களின் பெருந்தலைவராக இருக்கும் சௌமியமூர்த்தி தொண்டமான் கூட இந்த நாட்டின் பிரஜையாக அங்கீகரிக்கப்பட்டு இந்த சபையிலே மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தது.
உண்மை இவ்வாறிருக்க – இனவாத நோக்கத்திலும் எங்களை ஒரு தவறான தரப்பாகக் காட்டுவதற்கும், பொறுப்பாக நடத்து கொள்ளவேண்டிய அமைச்சர் என்ற வகையிலே, அதுவும் ஒரு நீதியமைச்சர் என்ற வகையிலே மாபெரும் அநீதியொன்றை இந்த அமைச்சர் இந்த சபையிலே எனக்கெதிராகவும் எனது அமைப்புக்கு எதிராகவும், செய்திருக்கிறார்.
இதற்கும் மேலாக – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் எனது சக பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனை ஒரு கொலைகாரனாகவும் ஆயிரக்கணக்கில் மக்களை கொலை செய்தவராகவும் குறிப்பிட்டிருக்கிறார். இது ஒரு அப்பட்டமான பொய் மட்டுமல்ல, இந்த மாதிரியான கருத்தை வெளியிட்டதால் விஜயதாஸ ராஜபக்கஸ நீதியமைச்சர் என்ற பதவிக்கு தகுதியில்லாதவர் என்பதை அவரே நிரூபித்திருக்கின்ற நிலையில் அவர் உடனடியாக இந்த பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும். அல்லது மதிக்கப்படக்கூடியவராக அவர் இருப்பாரானால் இந்த பொய்களைக் கூறியதற்காக அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.
கௌரவ சபையிலே பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தமாக இந்தவகையான பச்சைப் பொய்களைச் சொல்வதை ஒருபோதிலும் ஏற்கமுடியாது. ஆகவே இதற்குரிய நீதியை வழங்குவதற்காக சபாநாயகருக்கு இந்த விடயத்தை சமர்ப்பிக்கின்றேன்.
அடுத்தாக-
நானும் கஜேந்திரனும் திட்டமிட்டு குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக வடக்கில் இருந்து ஆட்களை வாகனங்களில் ஏற்றி கிழக்குக்கு கொண்டு சென்று நினைவுகூரலை செய்ததாகவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராhஜபக்ச சொல்லியிருந்தார்.
நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும், ஒரு கட்சியின் தலைவராகவும் இருக்கின்றேன்.  தாங்கள் நினைவுகூருகின்ற இடத்தில் தங்களுக்கு இராணுவமும் பொலிசாரும் அச்சுறுத்துகின்றார்கள் என்றும் தங்களுக்கு பயமாகவும் இருக்கின்றது என்றும் கிழக்குக்கு வாருங்கள் என்றும் மக்கள் கேட்டநிலையில் நானும் கஜேந்திரனும் மட்டும் சென்றிருந்தோமே தவிர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆட்களை வாகனங்களில் கொண்டு சென்றிருக்கவில்லை.
அதுமட்டுமல்லாமல் –
ஆரம்பத்திலிருந்தே எனது பேச்சில்  நான் சுட்டிக்காட்டிய விடயம் என்னவென்றால் –
2015 ஆம் ஆண்டிலும் விஜயதாஸ ராஜபக்ஸவேதான்  நீதியமைச்சராக இருந்தபோது, அப்போதைய வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீரவுடன் ஜெனிவாவுக்கு சென்று பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை அமுல்படுத்த மாட்டோம் என்ற உத்தரவாதத்தை சர்வதேச சமூகத்துக்கு வழங்கியிருந்தீர்கள். அதுமட்டுமல்ல நினைவு கூர்தல் தொடர்பாக அரசாங்கம் எந்ததடையும் விதிக்கப்போவதில்லை என்றும் தொடர்ச்சியாக உறுதியளித்து வந்தீர்கள்.
அரசாங்கம் இவ்வாறு சர்வதேச சமூகத்திடம் உறுதியளித்திருந்தும், பொலிசார் நீதிமன்றங்களை நாடி நினைவேந்தல்களுக்கு எதிராக தடைகளை ஏற்படுத்த கோரி நீதிமன்றங்களுக்கு சென்றிருந்தும், மூதூர் நீதிமன்றத்தை தவிர ஏனைய நீதிமன்றங்கள் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்காமல், பொலிசாரின் கோரிக்கைகளை நிராகரித்திருந்தது. இந்தநிலையில் கூட, நினைவு கூருவதற்கு சென்ற பத்துப்பேரை கிழக்கு மாகாணத்தில் பயங்கர வாத சட்டத்தின்கீழ் கைது செய்து  சிறையிலே அடைத்திருக்கிறார்கள்.
நீதிமன்றமே தடைவிதிக்காத நிலையில் – அரசாங்கமே நினைவு கூர்தலை செய்ய முடியும் என்று சொல்லியிருக்கும் நிலையில் – பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்த மாட்டோம் என்று அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு  வழங்கிய வாக்குறுதியை மீறி, பொலிசார் நடந்துள்ள விடயம் தொடர்பாகவே அரசாங்கம் தலையிடவேண்டும் என்று கேட்டிருந்தேன். நீங்கள் சர்வதேச சமூகத்துக்கும் ஐ.நா.மனித உரிமை பேரவைக்கும் வழங்கிய வாக்குறுதியை நடைமுறைப்படுத்துவதற்கே தலையிடுமாறு கேட்டிருந்தேன்.
அமைச்சர் என்ற வகையில், தான் நீதிமன்ற விடயத்திலோ, பொலிசாருடைய விடயத்திலோ, சட்டமா அதிபர் திணைக்கள விடயத்திலோ தலையிடுவது முறையல்ல என்றும் அது ஜனநாயக விரோதம் என்றும் விஜயதாஸ ராஜபக்ஸ தனது உரையில் குறிப்பிட்டு தன்னை ஒரு கடும் நேர்மையான ஆளாக காட்டிக்கொள்ள முற்பட்டிருந்தார்.
ஆனால் – உண்மை என்னவென்றால் –
இதே விஜயதாஸ ராஜபக்ஸதான் 2019 ஒக்டோபர் 22 ஆம் திகதி சண்டே ஒப்சேவர் பத்திரிகை பேட்டியொன்றில் இப்படி தனது பெருமையை கூறியிருக்கிறார்.
அது என்னவென்றால் –
‘நான் நீதியமைச்சர் என்ற வகையில் சட்டமா அதிபர் திணைக்களம் நடத்திய விசாரணையில் நேரடியாக தலையிட்டு கோட்டபாய ராஜபக்ஸவை அவன்காட் வழக்கில் கைதுசெய்வதை தடுத்து நிறுத்தினேன் என்று பெருமைபட்டுள்ளார்’
அதேபோன்று –
‘ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சாட்சி வழங்கிய இடத்தில் இவ்வாறு அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
‘நான் அவசர அவசரமாக ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் முன்னாள் பொலிஸ் மா அதிபருடனும் தொடர்பு கொண்டு கோட்டாபாய ராஜபக்சவை கைதுசெய்தால், அரசாங்கத்தை தவறான முறையிலே சித்தரிக்கும் என்றும் சுட்டிக்காட்டி அந்த கைதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறி அந்த கைதை நிறுத்தியிருந்தேன்’
என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கௌரவ சபாநாயகர் அவர்களே !
இவரது இந்த நடவடிக்கைகள் தான் தலையீடுகள் ஆகும். அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளுக்கு மாறாக அமைச்சர் என்ற வகையில் அதனுள் தலையிட்டு ஊழல் வாதிகளை காப்பாற்ற செயற்பட்டமை தான் தலையீடும் முறைகேடுமே தவிர,
நான் குறிப்பிட்ட – அரசாங்கமே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம், நினைவுகூரலாம் என்று கூறிய விடயங்கள் – அரசாங்கத்தின் கொள்கையாக சர்வதேச மட்டத்துக்கு உறுதி வழங்கியிருக்கவும், அதை பொலிஸார் மீறுகின்ற போது, அமைச்சர் அதில் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்ற எனது கோரிக்கை தொடர்பாக அமைச்சர் செயற்படுவது ஒரு தலையீடாக இருக்க முடியாது. மாறாக – தவறு நடப்பதை சீர்ப்படுத்தும் செயற்பாடாகவே அது அமையும்.
ஆகவே – இப்படிப்பட்ட ஒரு நிலையில் -இந்த நீதியமைச்சர் மிக மோசமாக இந்த சபையை பிழையாக வழிநடத்த முயற்சித்து எங்கள் தொடர்பாக அப்பட்டமான பொய்களையும் சொல்லியிருப்பதை வன்மையாக கண்டிப்பதோடு விஜயதாஸ ராஜபக்ஸ நீதியமைச்சர் என்ற பதவிக்கு தகுதியற்றவர் என்ற விடயத்தையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இறுதியாக – இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என்று நான் கூறியபோது – ஒரு சில படங்களை சபைக்கு காட்டியிருந்தார். அந்தப் படங்கள் விடுதலைப்புலிகளுடைய தலைவரின் முகமும் விடுதலைப்புலிகளின் சின்னமும் பொறிக்கப்பட்ட ரீ சேட் போடப்பட்ட படங்களாகும். அப்பொழுது மிகத் தெளிவாக நான் குறிப்பிட்டிருந்தேன்.
ஒருவேளை – மிகப் பாரதூரமான நிலைமையொன்று உருவாகியிருந்தால், பாரிய தாக்குதல் நடைபெற்று நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் சீர்குலையும் நிலைமை உருவாகியிருந்தால் – இந்த பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டிய ஒரு கொடுரமான சட்டமாக இருந்தாலும், அந்த சூழ்நிலையைக் கட்டுப்படுத்த வேறொரு சட்டமும் இல்லாத இடத்தில் அதனைப் பாவிப்பதானால் சிலவேளைகளில் நியாயப்படுத்த கூடியதாக இருக்கும். ஆனால் – ரீசேட் அணிவதோ, அல்லது அரசாங்கமே விரும்பி அனுமதித்த நினைவுகூரலை செய்வதையோ தடுப்பதற்கு இந்தச் சட்டத்தைப் பாவிப்பது தவறென்பதைத் தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.
ஆகவே இந்த அமைச்சர் செய்யாது விட்டாலும், இந்த அரசாங்கம் தலையிட்டு அந்தத் தவறை சரிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
இதற்கு விஜயதாச ராஜபக்ஸ பதிலளிக்கையில்
நாங்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று கூறிய விடயத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதற்கு பதிலாக இன்னொரு சட்டம் கொண்டு வருதற்கு எடுத்த முயற்சிகளுக்கு எதிர்ப்புக்கள் ஏற்பட்டதால் அதனை நிறைவேற்ற முடியாத நிலையிலேயே இந்தச் சட்டம் தொடர்ந்தும் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த விடயத்தைதான் நாட்டினுடைய சட்டம் என்னும் கோணத்தில் தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தேன். என்று தெரிவித்திருந்தார்.
அதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பதிலளிக்கையில்
நான் எனது பேச்சிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். பாரிய தாக்குதல் ஒன்று நடைபெற்றிருந்தால் நீங்கள் இந்த சட்டத்தை மீள நடைமுறைப்படுத்துவது பற்றி யோசிக்க முடியும் என்று தெரிவித்திருந்தேன். நான் கதைக்கும் விடயம் என்னவெனில் – அரசாங்கமும், நீதிமன்றமும் அனுமதி கொடுத்த நிகழ்வில் கலந்துகொள்வதைத் தடுப்பதற்கு பொலிசார் அந்த சட்டத்தை பயன்படுத்துவதை தான் நான் கடுமையாகக் கண்டித்து நீங்கள் அதனை அனுமதிக்கக்கூடாது என்று கேட்டிருந்தேன்.
அதேபோன்று – யாழ்ப்பாணத்தில்தான் நீங்கள் படங்களில் காட்டிய ரீசேட் சம்பவங்கள் நடந்திருந்தது. கிழக்கில் அப்படி நடந்திருக்கவில்லை. கிழக்கில் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு நியாயத்தையும் உங்களால் சுட்டிக்காட்ட முடியாது. யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவம் தொடர்பாகவும், அந்த சம்பவத்தை விசாரிக்க வேண்டாம் என்று நான் கோரவில்லை. ஆனால், அதையும் கூட பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டிய விடயம் அல்ல. சாதாரண சட்டத்தின் கீழ் தான் விசாரிக்கபட வேண்டும் என்பதை மட்டுமே நான் சொல்லியிருந்தேன். ஏனெனில் அது பயங்கரவாத செயற்பாடு அல்ல. இப்படிப்பட்ட செயற்பாடுகளையும் நீங்கள் பயங்கரவாதமாக கருதி செயற்படுவது தான் மிகக் கொடுரமான விடயமாக சர்வதேச சமூகமே கருதி அதை செய்யாதீர்கள் என்று சொல்லிவருகிறது என்று தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews