முல்லைத்தீவில் விபத்து : ஒருவர் பலி – மற்றுமொருவர் படுகாயம்

முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அணிஞ்சியன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று(23.11.2023) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற பணியாளர்களை ஏற்றுகின்ற பேருந்து ஒன்று இன்று  காலை 6.10 மணியளவில் பணியாளர்களை ஏற்றுவதற்காக சென்றுக்கொண்டிருந்த நிலையில், பின்னால் MAG மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றி வரும் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.

வீதியின் இடையே திடீரென பேருந்து திரும்பிய நிலையில்,  பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்து எந்த சமிக்ஞைகளுமின்றி திடீரென திரும்பியதாகவும் இதனால் பேருந்துடன் மோதி தான் தூக்கி வீசப்பட்டதாகவும் மற்றையவர் பேருந்து சில்லுக்குள் சிக்குண்டு இறந்ததாகவும் காயமடைந்தவர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் மல்லாவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தைச் சேர்ந்த கந்தையா சிவநாதன் என்ற 48 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற மல்லாவி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் குறித்த பேருந்து சாரதி வழமையாக வேகமாக செல்வதாகவும், இதற்கு முன்னரும் இதே பேருந்து குறித்த பகுதியில் விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews