தாயகத்தை கண்காணிக்க தூதுக்குழு வருகையா? – சட்டத்தரணி சுகாஷ் கேள்வி

யாழ்ப்பாணத்தில் கடல் அட்டை பண்ணை விரிவாக்கத்துக்கும் தமிழர் தாயக பகுதிகளை கண்காணிப்பதற்கும் தூதுக்குழு ஒன்று வருகை தர உள்ளதாக அறியக் கிடைப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.
அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பூகோள போட்டி காரணமாக  யாழ்ப்பாணம் வருகை தர உள்ள தூது குழு கடல் அட்டை விரிவாக்கத்திற்கும் தாயக பகுதிகளை கண்காணிக்கவும் வருவது ஆபத்தான விடயம்.
இலங்கை கடலால் சூழப்பட்ட தீவாக காணப்படுகின்ற நிலையில் எமது கடல் வளம் வெளிநாட்டு சக்திகளுக்கு தாரைவார்க்கப்பட்டு கொண்டிருக்கிறது.
ஆட்சியாளர்கள் சீனாவிடம் இருந்து மீன்கள் இறக்குமதி செய்வதற்கான உடன்படிக்கையை செய்துள்ள நிலையில் எமது கடல் வளமும் சீனாவுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.
எமது கடல் வளத்தை  எமது மீனவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் எதிர்காலத்தில் எமது மீனவர்களும் சீனாவின் மீன்களை உண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
பூகோள ரீதியாக ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை இந்தியாவும் வெளிநாடுகளும் தலையிட்டு விரைவாக வழங்க வேண்டும்.
ஆகவே பூகோள ரீதியாக ஏற்பட்டுள்ள சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்கு, தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வழங்காவிட்டால் அயல் நாடான இந்தியாவின் இறையாண்மைக்கும் பங்கம் ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews