மது அருந்திய இடத்தில் தகராறு! அடித்துக் கொல்லப்பட்ட வயோதிபர்..!

புதுக்குடியிருப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு  அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி  மயில்குஞ்சன் குடியிருப்பு பகுதியில் மது அருந்தும் இடத்தில் இருவருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி பொல்லுகளாலும் கோடரியாலும் தாக்கப்பட்டதில் இருவரும் காயமடைந்தனர்.

பின்னர் அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் கைவேலி பகுதியை சேர்ந்த 71 வயதான தம்பிப்பிள்ளை மார்க்கண்டு என்பவரே உயிரிழந்தார்.

தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலிஸ் பாதுகாப்பில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 30 வயதானவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைக்கலப்பிற்கு காரணம் பழைய முரண்பாடாக இருக்கலாம்  என சந்தேகிக்கப்படுவதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது

Recommended For You

About the Author: Editor Elukainews