ஜனாதிபதி ரணிலுடன் தொடர்பிலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களை அறிவேன் – சரத் பொன்சேகா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்பிலுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் நான் அறிவேன். எனினும் அது தொடர்பில் என்னால் கருத்துக்களை வெளியிட முடியாது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி , அக்கட்சியைக் காட்டிக் கொடுப்பதற்கு நான் தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

நாட்டில் பாதாள உலகக் குழுவினரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. எல்லா பகுதிகளிலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. எல்.டி.டி.யினரின் அனைத்து ஆயுதங்களும் எம்மால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. எனவே பாதாள உலகக் குழுவினல் புலிகளின் ஆயுதங்களை பயன்படுத்துவதாகக் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது

ஆனால் பாதாள உலகக்குழுவினருக்கு இன்று ஆயுதங்களைப் பெற்றுக் கொள்வது கடினமான விடயமல்ல. நாட்டில் பல விடயங்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்தினால் அதிகாரம் முறையாகப் பயன்படுத்தப்படாமையே இதற்கான காரணமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து யார் அரசாங்கத்துடன் இணைவார்கள் என என்னால் கூற முடியாது. எனினும் ஜனாதிபதியுடன் தொடர்பிலுள்ள சிலர் பற்றி நாம் அறிவோம். அது தொடர்பில் என்னால் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்க முடியாது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவீர்களா எனக் கேட்டு என்னை அசௌகரியத்துக்கு உள்ளாக்க வேண்டாம். எனினும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகிக் சென்று , அக்கட்சியை காட்டிக் கொடுப்பதற்கு நான் தயாராக இல்லை என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews