பொலிஸாரினாலும், சிங்கள இன வெறிக் காடையர்களினாலும் யாழ்ப்பாணம் பொது நூல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டு, சுமார் ஒரு இலட்சம் புத்தகங்களும் அரிய ஓலைச் சுவடிகளும் அழிக்கப்பட்டன….! எம்.கே.சிவாஜிலிங்கம்

இலங்கைப் பொலிஸாரினாலும், சிங்கள இன வெறிக் காடையர்களினாலும் யாழ்ப்பாணம் பொது நூல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டு, சுமார் ஒரு இலட்சம் புத்தகங்களும் அரிய ஓலைச் சுவடிகளும் அழிக்கப்பட்டன என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான யாழ். பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டதன் 42ஆவது ஆண்டு நினைவேந்தலானது யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் நேற்று முன் தினம்  (01.06.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தலின் போது,  யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா, யாழ்ப்பாண பொதுசன நூலகம்  எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம்,
இலங்கைப் பொலிஸாரினாலும், சிங்கள இன வெறிக் காடையர்களினாலும் யாழ்ப்பாணம் பொது நூல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டு, சுமார் ஒரு இலட்சம் புத்தகங்களும் அரிய ஓலைச் சுவடிகளும் அழிக்கப்பட்ட 42 ஆவது ஆண்டு நினைவு நாள் ஆகும்.
ஈழத் தமிழ் இனப் படுகொலை, கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்பட்டவை உட்பட்ட சர்வதேசக் குற்றங்களுக்காக குற்றவாளிகளைச் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தித் தண்டிப்போம்.
மேலும், இனப்படுகொலை மீள நிகழாதிருக்கவும் ஈடுசெய் நீதியைப் பெற்றுக் கொள்ளவும் ஈழத் தமிழ் இனம் தனக்கே உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரத்திற்கான பொது சன வாக்கெடுப்பே ஒன்றை ஈழத் தமிழ் தாயகத்தில் நடத்த முன்வருமாறு சர்வதேச சமூகத்தைக் கோருகின்றோம்.
தமிழ் இனத்தின் சுய நிர்ணய உரிமையை ஆதரிப்பவர்கள் சுதந்திரத்திற்கான பொதுசன வாக்கெடுப்பைத் தவிர வேறு ஏதாவது வழிகள் உண்டா என்பதைக் கூற வேண்டும் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews