தமிழர் தரப்பிடம் போராட்டங்களுடன் ராஜதந்திர நகர்வு இல்லாமையே பெரும் பலவீனம்! – சபா குகதாஸ்

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 14 ஆண்டுகள் கடந்து செல்லும் வேளையில் தமிழ்த் தேசியத் தரப்புக்களிடம் வெறும் தேர்தல் அரசியலும் வெற்றுக் கோச போராட்டங்களும் ஆங்காங்கே கத்திக் கலைவதுமாக நடக்கிறதே தவிர போராட்டங்களுடன் ஒரு ராஜதந்திர நகர்வு எதுவும் இல்லை.
தமிழர் தரப்பாக ஒன்று பட்டு போராட வேண்டிய நேரத்தில் தாயகத்தில் ஒரு தரப்பு ஒன்றுபடும் தரப்புக்களை விமர்ச்சிக்கும் நிலை ஆட்சியாளர்களுக்கும் பூகோள நலன் சார்ந்த நாடுகளுக்கும் அல்பா கிடைத்த மாதிரிப் போனதே தவிர தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியான பின்னடைவு தான் எஞ்சியுள்ளது.
தமிழர்களுக்கான நீதிக்கான கதவுகள் திறக்கப்படுவதற்கு உள் நாட்டு ஆட்சியாளர்களை இனியும் நம்புவது தமிழர் தரப்பின் பலவீனம் ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க சர்வதேச ரீதியாக அழுத்தங்களை இலங்கை அரசு மீது ஏற்படுத்தும் ராஐதந்திர நகர்வை தாயக புலம் பெயர் தரப்புக்கள் தொடர்ச்சியாக உருவாக்கவில்லை.
அறிக்கை அளவில் இனப்படுகொலை , சர்வசன வாக்கெடுப்பு, சமஷ்டி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்  என்ற விடையங்களை பேசினாலும் இதனை அடைவதற்கான பொறிமுறை இராஐதந்திர நகர்வுகளை கையாள தவறியவர்களாக தமிழர் தரப்பு  உள்ளனர்.
இலங்கையில் நடந்தது தமிழினப் இனப்படுகொலை தான் என்பதை ஒரு நாடு அங்கீகரிப்பதற்கு உரிய செயல் நடவடிக்கைகளை தீவிரமாக மேற் கொள்ளாமையே இலங்கை அரசாங்கம் உள்ளக பொறிமுறை என காலத்தை கடத்துவதுடன் நீதியை நீர்த்துப் போகவும் செய்கிறது.
தற்போதைய சூழலில் அரசியல் அதிகாரத்தின் மூலம் தான் தமிழர் தாயக இருப்புக்களை தக்க வைக்க முடியும் என்ற உண்மையை விளங்கியும் வெற்றுக் கோசம் இடுவதையே சில தரப்புக்கள் முதன்மைப் படுத்துகின்றனர்.
கடந்த காலத்தில் இனப் பிரச்சினை தொடர்பாக முன்னெடுத்த அத்தனை போராட்டங்களிலும் எந்தத் தவறுகள்  காரணமாக பின்னடைவைச் சந்தித்தோம் அல்லது அதிகார சக்திகளை எப்படி கையாள தவறினோம் என்பதை மீள் பரிசீலனை செய்தால் அதுவே பிரச்சினைக்கு  சரியான பாதையைக் காட்டும்  இதனைத் தமிழர் தரப்பு ராஐதந்திர ரீதியாக இதுவரை கையாளவில்லை.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியாக தமிழர் தரப்பு எடுக்கின்ற உறுதியான ராஐதந்திர நகர்வே தாயக இருப்பை பாதுகாக்கவும் பரிகார நீதிக்கான கதவுகளையும் திறக்கும்.

Recommended For You

About the Author: Editor Elukainews