தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டு பிரிவின் ஏற்பாட்டில் இலவச கல்விக்கருத்தரங்கு!

தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவசக் கல்வி கருத்தரங்கு ஆரம்பமானது.

இன்று ஞாயிற்றுக்கிழமை(21) காலை 8.30 மணிக்கு சித்தங்கேணிச் சந்தியிலுள்ள மகா கணபதி மண்டபத்தில் கருத்தரங்கு ஆரம்பமானது.

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்குடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கணித ஆசிரியர் அமரர் செல்லையா தவராஜா அவர்களின் ஞாபகார்த்தமாக தமிழ் மக்கள் கூட்டணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவு குறித்த இலவசக் கல்வி கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.

கருத்தரங்கில் பங்கு பற்றும் மாணவர்களுக்கு கொழும்பு பிரபல பாடசாலைகளின் வினாத்தாளுடன் கூடிய கையேடுகள் மற்றும் கருத்தரங்கில் பங்குபற்றுவதற்குத் தேவையான எழுதுகருவிப் பொருட்கள் என்பன வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன், கட்சியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவு பொறுப்பாளர் வ.பார்த்தீபன், கணித ஆசிரியர் அமரர் செல்லையா தவராஜாவின் குடும்பத்தினர், அனுசரணையாளர்கள், வளவாளர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களைக் கொண்டதாக அமைந்த இக்கருத்தரங்கு நாளை திங்கட்கிழமை (22) காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகிலுள்ள DCM கல்வி நிலையத்திலும் நடைபெறவுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews