மட்டக்களப்பில் பெண்கள் உட்பட 3 பேர் மீது தாக்குதல்! இருவர் கைது

மட்டக்களப்பு – திருப்பெரும்துறை பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு வியாபாம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர்கள் மீது குழு ஒன்று வீடு புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இதன்போது அங்கிருந்த பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்தி சென்ற சம்பவம் தொடர்பாக இருவரை புதன்கிழமை (26) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் கடந்த 24 ம் திகதி திங்கட்கிழமை இரவு 9.20 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள் மற்றும் இரு முச்சக்கர வண்டிகளில் 8 பேர் கொண்ட குழுவினர் உட்புகுந்து கசிப்பு விற்பனை தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர்கள் என அங்கிருந்த இரு பெண்கள் உட்பட 3 பேர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளதுடன் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்தவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews