என்.வி.சுப்பிரமணியத்தின் ஊடக சந்திப்பு

நாட்டில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும், ஜனநாயக விரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதுடன், சர்வாதிகார போக்கே காணப்படுவதாகவும் அகில இலங்கை தொழிலாளர் சம்மேளன கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி. சுப்பிரமணியம் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது இலங்கை அரசு தமிழர்கள் மீது மேற்கொள்ளும் அடக்குமுறைகளானது அரசின் சர்வாதிகாரம் வெளிப்படுத்தி நிற்கின்றது. தமிழர்கள் காலங்காலமாக சிங்கள இனவெறி பிடித்த அரசுகளால் அடக்கியொடுக்கப்பட்டுள்ளோம்.
ஆரம்ப காலந்தொட்டு இனவாத நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டு தமிழர்களின் அடையாளங்கள், கலாசாரங்கள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
சில வருடங்களுக்கு முன் குருந்தூர் மலையை தொல்லியற் திணைக்களம் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட போது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு  நிலுவையிலுள்ள போதும் விகாரையை கட்டி முடித்துள்ளனர்.
இதேவேளை கன்னியாவிலும் ஆக்கிரமி்ப்பு நடைபெற்றிருக்கும் வேளை அங்கு பாதையோரங்களில் திட்டமிட்டு சிங்கள நடைபாதை வியாபாரங்களுக்கு அனுமதியளித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன் திருக்கடலூரில் பாதுகாப்பு படையினரின் மறைமுக உந்தலில் தமிழர் பகுதியில்  இன முறுகலை ஏற்படுத்தி சுதந்திரத்திற்கு அச்சம் ஏற்படுத்தியுள்ளனர்.
அண்மையில் கிழக்கு மாகாணத்தில் நெல் வயலிலே திட்டமிட்டு 30 க்கு மேற்பட்ட மூட்டைகள் பெரும்பான்மையினரால் அபகரித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும் எவ்வாத நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இந்த விடயங்களை கையிலெடுத்து கண்டனங்களைத் தெரிவித்தால் அது அரசிற்கு முட்டு்கட்டையாக உள்ளது. அதனை தடுக்க புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மூலம் எமது குரல்களை ஒடுக்க முயல்கின்றனர்.
இந்த சட்டத்தை ஜனநாயக நாட்டிலே ஜனநாயகத்திற்கு முரணாக அமுல்படுத்த முயல்கின்றனர். இந்த சட்டத்தை அனைத்து தரப்பும் எதிர்க்க வேண்டும் என்பதுடன் அரச தலைவரும் இதனை மீள் பரிசீலனை மேற்கொள்ள வேண்டும்.
எமக்கு பல கட்சிகளும் பல தலைவர்களும் இருந்தாலும் பல்வேறு தரப்பாக பிரிந்துள்ளனர். தமிழர்களுக்கு இறுதியாக உள்ள ஆயுதம் ஒற்றுமை மட்டுமே. தமிழ்த் தேசியம் பேசும் தமிழ்த் தலைவர்கள் மண்ணிலும் மக்களிலும் கருணை கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சில தினங்ளுக்கு முன்னர் தமிழக முதல்வர் ஸ்ராலின் இந்தியப் பிரதமருக்கு  கச்சதீவை மீளப்பெற வேண்டுமென அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் ஊடகவியளாளர்கள் வினவிய கேள்வி்க்குப் பதிலளிக்கையில்.
ஸ்ராலின் இளம் தலைவராக காணப்படுவதால் பழைய  வரலாறுகள் பற்றி தெரியாது.
1974 இலங்கை – இந்திய பேச்சுவார்த்தையின் போது இந்திய பிரதமர் இந்திரா காந்தியால் இலங்கைக்கு தன்நலம் கருதி விட்டுக்கொடுத்தது.
இந்தியாவிலுள்ள தமிழர்களுக்கும் இலங்கையிலுள்ள தமிழர்களுக்குமிடையிலான நல்லிணக்க உறவை  திட்டமிட்டு தடுக்கும் நோக்கிலே இந்திரா காந்தியால் இலங்கைக்கு விட்டுக்கொடுத்தது.
மீனவர்கள் பல தடவை இலங்கை அரசால் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கினறோம்.
நல்லாட்சி காலத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதான இடம் வகித்தாலும் அவரைக் காப்பாற்றவே தமிழ்த் தலைவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டனர். கிராம எழுச்சி திட்ட நிதியை சட்டைப் பைக்குள்ளே போட்டுக்கொண்டு தமிழ்த் தரப்பு பிரதிநிதிகள்  அவர்களுக்கு ஆதரவளித்த நிலையே காணப்பட்டது.
இதேவேளை இவ் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஏனைய பிரதிநிதி,
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பாராளுமன்றில் முன்வைக்கப்படும் போது அதனை தமிழர் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும். நடுநிலை வகிப்பதாக இருப்பின் அது மறைமுகமாக அரசிற்கு ஆதரவு நிலைப்பாட்டையே வெளிப்படுதுவதாக அமையும் – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews