ஊழல் மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய மட்டக்களப்பு காணி ஆணையாளர் பணி நீக்கம்!

மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் விமல்ராஜ் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க அறிவித்துள்ளார்.
விமல்ராஜ் மீது சுமத்தப்பட்ட ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் உண்மை என தெரிவித்து அவரை குற்றவாளியாக கருதி   காணி சீர்திருத்த ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் விமல்ராச்சை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் விமல்ராஜ் அவர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கடிதத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை மற்றும்  17 மார்ச் தொடங்கி 2021 வரை இலக்கம் I – V வரை உங்கள் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் நீங்கள் குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளது.
 02. இதன்படி, உங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் பதவியிலிருந்தும், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் சேவையிலிருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு 24.02.2023 அன்று ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
 03. நிர்வாக உதவியாளர் திரு. சி.சுரேந்திரனிடம் கடமைகள், உடமைகள் மற்றும் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை ஒப்படைக்க ஏற்பாடு செய்யுமாறு உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என  இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர்
சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க அவர்களினால் கடிதம்   மூலம் விமல்ராஜ் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் இருந்த பல ஏக்கர் காணிகள் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக கடமையாற்றிய என்.விமல்ராஜ் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த காணி ஊழல் மோசடிகளில் தொடர்வுடைய பல அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews