மட்டு ஆரையம்பதியில் விசாரணைக்கு சென்ற பொலிசார் மீது தாக்குதல் இரு பொலிசார் படுகாயம் தாக்குதலை நடாத்தியவர் கைக்குண்டு ஒன்றுடன் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் 119 அவசர பிரிவுக்கு வந்த முறைப்பாடு தொடர்பாக குறித்த வீட்டிற்கு விசாரணைக்கு சென்ற பொலிசார் மீது  ஒருவர் தாக்கியதில் இரு பொலிசார் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி ஓடிய நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இரவு கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்துள்ள பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பாக தெரியவருவதாவது

ஆரையம்பதி கிழக்கு பிரதேசத்தில் இருந்து சம்பவதினமான நேற்று காலை பொலிசாரின் 119 அவசரசேவை பிரிவுக்கு தன்னை தனது கணவர் அடித்து துன்புறுத்துவதாக தொலைபேசி அழைப்பையடுத்து இரு பொலிசார் வாகனத்தில் விசாரணைக்காக அந்த வீட்டிற்கு சென்றபோது அங்கு இருந்த வீட்டின் உரிமையாளரான மனைவியை தாக்கியநபர் பொலிசார் மீது தாக்குதலை மேற்கொண்டதையடுத்து இரு பொலிசார் காயமடைந்ததையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த இரு பொலிசாரையும்; ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அங்கிருந்து ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்

இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி ஓடிய நபரை நேற்று இரவு கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்துள்ளதாகவும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews