அவலப்பட்டு ஒரு சிறு பையோடு புலம்பெயர்ந்த எங்களைத்தான் இன்று இந்த நாடே எதிர்பார்த்து நிற்கிறது!! ஒற்றுமைப்படுங்கள் ஆறு திருமுருகன் அழைப்பு…

அவலப்பட்டு சிறு பையோடு புலம்பெயர்ந்தவர்களை இந்த நாடே எதிர்பார்த்திருக்கும் நிலையின் மூலம் நாம் அழுத கண்ணீருக்கு விடை கிடைத்திருக்கின்றது. என கலாநிதி ஆறு திருமுருகன் கூறியுள்ளார்.

யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

எங்களிடத்தில் ஆசன போட்டி இடம்பெறுகின்றதே தவிர எங்களிடத்தில் ஒற்றுமை இல்லை. யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் எல்லாம் பண்பாக நடந்தால் எமக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது. வரலாறுகளை கைவிட்டு விட்டோம்.

எங்களுடைய வரலாறுகளை பேணி பாதுகாக்க வேண்டும். வார்த்தைகளில் பிரயோசனம் இல்லை செயல் வீரர்கள் தான் வேண்டும், அரசியலுக்கு அப்பால் வள்ளுவனுக்கு ஒரு அருமையான சிலை வைத்துள்ளார்கள்.

எங்களுக்கு ஒரு குறையும் இல்லை கடவுள் எங்களை கைவிடவில்லை நாங்கள் அடித்து துரத்தப்பட்டு அவலப்பட்டு ஒரு சிறு பையோடு புலம் பெயர்ந்த சமூகம் இன்று கோடான கோடியை கொடுத்து இந்த மண்ணில் எவ்வளவு கோயில்களை கட்டுகிறார்கள்,

பாடசாலைகளை அலங்கரிக்கிறார்கள் எப்படி வாழ்ந்த கிராமங்களை எழுச்சி பெற செய்கின்றார்கள் இன்று கடவுள் அருளால் கடல் கடந்து கண்டம் கடந்து போனவர்களுக்கு ஒரு சக்தி பிறந்திருக்கிறது.

இன்று நாடு கூட அவர்களைதான் தேடுகின்றது. இந்த நாட்டினுடைய அரசு புலம்பெயர் தமிழர்களை கூப்பிடுகிறது. நீங்கள் முதலிட்டால் இந்த நாடு நிமிருமென்று, இந்த நாட்டை அடகு வைத்தவர்கள் அடகை மீட்பதற்கு யாரை கூப்பிடுகிறார்கள்?

அவலப்பட்ட தமிழர்களைத்தான் இன்றைக்கு கூப்பிடுகின்றார்கள். அழுத எமது கண்ணீருக்கு தீர்வு கிடைத்திருக்கின்றது எனவே நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews