என்.வி.சுப்பிரமணியம் ஊடக சந்திப்பு…!

இன்று நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அடிக்கடி விலைவாசிகள் அதிகரிப்பது வழமையாகி விட்டது. இந்நிலையில் விலைவாசியை அதிகரிக்கும் போது அரசாங்கம் 100, 200 ரூபாவால் அதிகரிக்கின்றார்கள். அந்த விலைவாசியை குறைக்கும் போது விலை அதிகரிப்பு செய்த தொகையிலிருந்து பத்து வீதத்தால் குறைக்கின்றார்கள் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த விலைவாசி அதிகரிப்பானது நமது மக்களை பாரிய அசௌகரியங்களுக்குள் தள்ளியுள்ளது. விலைவாசியை உயர்த்திவிட்டு மீண்டும் குறைக்கின்ற பொழுது மக்களுக்கு ஏதாவது பிரயோசனம் உள்ள வகையில் குறைக்க வேண்டும். இந்த விலைவாசி விடயத்தை அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

கடந்த 22 ஆம் தேதி வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி அவர்களால் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட, இந்திய நாட்டுப் பட உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கி நமது கடல் பரப்புக்குள்ளே மீன்பிடிப்பதற்கு விடுவதென்று ஒரு முன்மொழிவு இலங்கை வாழ் வட பகுதி மீனவர்கள் மத்தியில் ஒரு பெரிய ஏமாற்றத்தையும் ஒரு அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

எமது மீனவர்கள், தொடர்ச்சியாக இந்தியாவிலிருந்து எல்லை தாண்டி வருகின்ற இழுவைமடி படகுகளினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்ற இந்த வேளையிலே இவ்வாறு அனுமதி வழங்குகின்ற ஒரு செய்தியை பாராளுமன்றத்தில் சொன்னவுடன் அங்கிருந்து வருகின்ற படங்களின் எண்ணிக்கை பல மடங்கு உள்ளன.

முல்லைத்தீவில் இருந்து மன்னர் வரைக்கும் உள்ள கடற் பிராந்தியத்தில் எல்லா இடங்களிலும் திருவிழா கோலம் போல் இந்திய இழுவைப்படகுகள் ஆக்கிரமித்து தமது தொழிலை செய்து வளங்களை அழித்துக் கொண்டுள்ளனர்.

இது இவ்வாறு இருக்கையில் இந்திய மீனவர்கள் சில தினங்களுக்கு முன்னர் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதனை யார் செய்தாலும் உண்மை தன்மை இருந்தால் கண்டிப்பாக அது ஒரு மிலேச்சத்தனமான செயல்பாடு. அதை யார் செய்தார்கள் என இதுவரை உறுதிப்படுத்தவில்லை, அது ஒரு துன்பியல் சம்பவம்.

இலங்கை இந்திய மீனவர்கள் ஒரே வழியில் வந்த தொப்புள் கொடி உறவு. இவ்வாறு இரண்டு தரப்பினர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனையை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுகின்ற மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏன் எங்கள் பக்கத்தில் நடக்கின்ற அழிவுகளை அவர் கரிசனை கொண்டு பார்க்கவில்லை. எமக்கான நிவாரணங்கள் வழங்கப்படவில்லை.

தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தமது நாட்டு மக்கள் வேறு நாட்டவர்கள் மற்றும் வேறு இனம் எனக் கூறிக்கொண்டு இருக்கின்ற வேளை, தமது மக்கள் தமிழர்கள் என கூறிக் கொண்டிருக்கின்றார். அவர் ஒருதலைப் பட்சமான அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். முக.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கின்ற மீனவர்களும் இலங்கையின் வடபகுதியில் இருக்கின்ற மீனவர்களும் சமம் என கருதினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு முன் வர வேண்டும்.

இது இவ்வாறு இருக்கையில் இந்தியாவில் மீனவர்கள் ஆயிரக்கணக்கானவர்களை உள்வாங்கி அவர்களுக்கு அவர்களுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படுகின்றது. இது எதற்கு என்று தெரியவில்லை. மீனவர்களுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கும் போது மீனவர்களுக்கு இடையில் முரண்பாடுகள், மோதல்கள் ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

கள்ளுத்தடிகளால் நடைபெற்ற முரண்பாடுகள் இனி தற்காப்பு பயிற்சி கொடுத்து விட்டால் அவர்கள் வேறு ஆயுதங்களை பயன்படுத்தி ஒவ்வொருத்தரது உயிர்களை குடிக்க கூடிய சூழ்நிலை ஏற்படும்.

எனவே தமிழ்நாட்டில் மீனவர்களுக்கு தற்காப்பு பயிற்சி வழங்குவதன் நோக்கம் என்ன அதன் வெளிப்படைத்தன்மையை உடனடியாக தமிழ்நாட்டு அரசு வெளிப்படுத்த வேண்டும் – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews