மக்கள் பயன்பாட்டிலிருந்த காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்

மக்கள் பயன்பாட்டிருந்த காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலகத்தின் சமூக விவகார பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னக்கோன், ஜனாதிபதியின் வடக்குக்கான விசேட செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் வனலாகா திணைக்களம் மற்றும் வனஜீவராசி திணைக்களம் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

நீண்ட காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்த காணிகளை குறித்த திணைக்களங்கள் தம்வசப்படுத்தியிருந்த நிலையில், அவற்றை விடுவிக்குமாறு மக்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், குறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. இதன் போது, 300 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இவ்வாறு விடுவிக்கப்பட வேண்டி உள்ளதாகவும், விரைவாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எவவும் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews