கொழும்பை கையாள முடியாதபோது தமிழர் விவகாரத்தை கையிலெடுப்பதும்,  கொழும்பு பணிந்துபோகின்ற போது தமிழர் விவகாரத்தை கிடப்பில் போடுவதும் இந்தியாவின் வழமையாகும்….!சி.அ.யோதிலிங்கம்.

கொழும்பை கையாள முடியாதபோது தமிழர் விவகாரத்தை கையிலெடுப்பதும்,  கொழும்பு பணிந்துபோகின்ற போது தமிழர் விவகாரத்தை கிடப்பில் போடுவதும் இந்தியாவின் வழமையாகும் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்ம் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்க்கு இன்று வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது.
இலங்கையின் இனப்பிரச்சினை இன்று தென்னிலங்கை, இந்தியா, மேற்குலகம் என சகல தளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது. ஒவ்வொரு தளங்களும் தங்கள் தங்கள் நலன்களிலிருந்து நகர்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. நகர்வுகளில் எவருமே விதிவிலக்காக இருக்கவில்லை. ஜனாதிபதி ஒரு வருடத்தில் புதிய அரசியல் யாப்பு மூலம் தீர்வு காண்பதாக கூறியுள்ளார். மேற்குலகம் சொல்ஹெய்மை மீண்டும் களத்தில் இறக்கியுள்ளது. இந்தியா, புதுடில்லி மாநாடுவரை சென்றுள்ளது.
இந்த நகர்வுகளுக்கு இலங்கை எதிர்நோக்குகின்ற நிர்ப்பந்தங்களே காரணமாகும். இனப்பிரச்சினையை ஏதோவொரு வகையில் தீர்க்காமல் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள முடியாது  என்பதே இந் நிர்ப்பந்தங்கள் சொல்கின்ற செய்தியாகும். இது இந் நெருக்கடித் தீர்வில் தமிழ் மக்களுக்கும் கௌரவமான பங்கு உண்டு என்பதை துலாம்பாரமாக வெளிப்படுத்துகின்றது.
அவ் நிர்ப்பந்தங்களில் முதலாவது உள்நாட்டு சர்வதேச பிரமுகர்களின் கருத்துக்களாகும். இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, இந்தியாவின் ஜெனிவாப் பிரதிநிதி, சொல்ஹெய்ம், நாகலாந்து மக்கள் முன்னணியின் தலைவரான தெமிசோரின்ய, இந்திய சமதாக் கட்சியின் பொதுச் செயலாளர் கோன் ஆகியோரின் கருத்துக்கள் முக்கியமானவையாக இருந்தன. இதனை சென்றவாரக் கட்டுரையில் பார்த்திருந்தோம்.
இரண்டாவது நிர்ப்பந்தம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளாகும். இனப்பிச்சினை தொடர்பாக இது இரண்டு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. அதில் ஒன்று இராணுவத்தைக் குறைக்க வேண்டும். இரண்டாவது புலம்பெயர் தமிழ் மக்களின் முதலீட்டை உள்வாங்க வேண்டும். இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் இந்த இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்திசெய்ய முடியாது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா நெருக்கடியுடன் தொடர்புபட்ட அனைத்து விவகாரங்களையும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைத்து ஒரு சூத்திரத்தை உருவாக்கியுள்ளார். வரிக்கொள்கை விவகாரத்திலும், 22வது திருத்தத்திலும் இச் சுத்திரத்தின் மூலமே அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்தினார். உதாரணமாக 22வது திருத்தத்தைக் கொண்டுவரவேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை. அதனை நிறைவேற்றாவிட்டால் சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைக்காது. அது ஒத்துழைக்கவில்லையென்றால் என்ன நிகழும் என்பதற்கு ஒரு பட்டியலையே வைத்திருக்கின்றார்.
கடன் மறுசீரமைப்பு செயற்பாடு வெற்றிபெறாது, உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்கள் உதவி வழங்கமாட்டா. சர்வதேச நாடுகள் உதவிக்கு வராது. ஜி.எஸ்.பி வரிச்சலுகை கிடைக்காது போகலாம் என பலவற்றை பட்டியலில் குறிப்பிட்டு இறுதியாக மீண்டும் வரிசை யுகம் தோன்றும் என கூறுகின்றார்.
இச் சூத்திரத்தைக் காட்டி பயமுறுத்தியே வரிவிதிப்புத் தீர்மானத்திலும், 22வது திருத்த நிறைவேற்றத்திலும் வெற்றிகண்டார். இனப்பிரச்சினைத் தீர்விலும் இறுதி ஆயுதமாக இந்த ஆயுதத்தை அவர் பயன்படுத்த முனையலாம். இலங்கையின் தற்போதைய நெருக்கடியை தன்னால் தான் தீர்க்க முடியும் என்ற விம்பத்தை உருவாக்குவதில் ரணில் வெற்றியடைந்து வருகின்றார் என்றே கூற வேண்டும். இது வெற்றியடைந்தால் சமாதானத்திற்கான நோபல் பரிசு ரணில் விக்கிரமசிங்காவுக்கு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மற்றவர்கள் போல் அல்லாது ரணில் விக்கிரமசிங்க மூளையால் அரசியல் நடாத்தும் ஒருவர். மூலோபாயங்களை விட தந்துரோபாயங்களில் அதிக கவனம் செலுத்துபவர். இவைதான் அவரை வெற்றிகளை நோக்கி நகர்த்துகின்றது.
இரண்டாவது இந்தியாவின் அண்மைக்கால நகர்வுகள். இலங்கைத் தீவில் சீனாவின் செல்வாக்கை அகற்றும் ஆற்றல் தென்னிலங்கைக்கு இல்லை என இந்தியா தற்போது உணர்ந்திருப்பது போல தெரிகின்றது. உண்மையில் தென்னிலங்கையின் கட்டுப்பாட்டிற்குள் சீனா இல்லை.  சீனாவின் கட்டுப்பாட்டுக்குள்தான் தென்னிலங்கை இருக்கின்றது. இது தென்னிலங்கையை மட்டும் கையாண்டு தமது இருப்பை நிலைநிறுத்த முடியாது என்பதை இந்தியாவிற்கு உணர்த்தியுள்ளது. எனவே வடக்கு – கிழக்கையும் கையாள வேண்டும் என உணர்ந்து நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.
கொழும்பை கையாள முடியாதபோது தமிழர் விவகாரத்தை கையிலெடுப்பதும்,  கொழும்பு பணிந்துபோகின்ற போது தமிழர் விவகாரத்தை கிடப்பில் போடுவதும் இந்தியாவின் வழமையாகும். எண்பதுகளில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை கையாள முடியாதபோது தமிழர் விவகாரத்தை கையிலெடுத்தது. பின்னர் 1987ம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கொழும்பு பணியத் தொடங்கியதும் தமிழர் விவகாரத்தை கிடப்பில் போட்டது என்பது வரலாறு.
தற்போது தென்னிலங்கையில் தனது செல்வாக்கை நிலைநிறுத்திய சீனா வடக்கு – கிழக்கிலும் தனது செல்வாக்கை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது. இதனூடாக இந்து சமுத்திரத்தில் தனது அரசியலின் ஒரு பகுதியாக வடக்கு – கிழக்கையும் மாற்றத் தொடங்கியுள்ளது. அபிவிருத்திச் செயற்பாடுகள் நிவாரண உதவிகள், யாழ் கிழக்கு பல்கலைக்கழகங்களுடன் கூட்டுச் செயற்பாடுகள் என தனது நிலையை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது. தமிழ் நாட்டின் கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமளவுக்கு சீனாவின் நகர்வுகள் சென்றிருக்கின்றன.
இந்த நிலையில் தான் இந்தியா மீண்டும் தமிழர் விவகாரத்தைக் கையிலெடுக்கத் தொடங்கியுள்ளது. புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட நிலையிலும் முன்னாள் போராளிகளை புது டில்லிக்கு அழைத்து மாநாட்டினை நடாத்தியுள்ளது. யாழ்.  கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இந்தியாவுக்கு சார்பாக அறிக்கைகளை விட்டுள்ளனர்.
இந்திய விசுவாசியான பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தமிழகத்திற்கு பயணம் செய்திருக்கின்றார். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை இந்தியத் தரப்பினர் சாதகமாக அணுகத் தொடங்கியுள்ளனர். இந்த நகர்வுகளை எல்லாம் தொகுத்துப் பாhத்தால் இந்தியா வலுவான செய்தியை சொல்ல முனைவதைப் பார்க்கலாம்.
மூன்றாவது பாரதிய ஜனதாக்கட்சி தமிழகத்தில் காலூன்றுவதற்கு முயற்சிக்கின்றமையாகும். அங்கு காலூன்ற வேண்டுமென்றால் இலங்கை விவகாரத்தையும் கையிலெடுக்க வேண்டும். பாரதிய ஜனதாவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலையின் இலங்கைப் பயணம் தொடர்ந்து பாரதிய ஜனதா மணவர் அணியின் இலங்கைப் பயணம்,  இந்தியாவின் ஜெனிவாப் பிரதிநிதி இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக அண்ணாமலையுடன் ஆலோசித்தல் ஜெனிவா நிலைப்பாட்டின் வளர்ச்சி நிலை என்பன தமிழ்நாடு மாநில பாரதீய ஜனதாவின் நகர்வுகளை வெளிப்படுத்துகின்றன.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் பலவீனமான நிலைக்குச் சென்றுகொண்டிருப்பதால் தி.மு.க விற்கு மாற்றாக தமிழகத்தில் தன்னை நிலை நிறுத்த பாரதிய ஜனதாக் கட்சி முயல்கின்றது.
நான்காவது தமிழ்நாட்டுக்கு வெளியேயுள்ள தரப்புக்களும் இலங்கை இனப்பிரச்சினையில் அக்கறை செலுத்த முயல்கின்றமையாகும். நாகலாந்து மக்கள் முன்னணியும் இந்திய சமதாக் கட்சியும் இது விடயத்தில் முன்னணியில் நிற்கின்றது. அண்மையில் இலங்கையின் தமிழ் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த நாகலாந்து மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் மாநில அமைச்சருமான ரெமிசோரின்யூவும்; இந்திய சமதாக் கட்சியின் பொதுச் செயலாளர் கோனும் இதனை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தக் கட்டுரையாளரை இயக்குனராகக் கொண்ட சமூக விஞ்ஞான ஆய்வுமையத்துடனான கலந்துரையாடலிலும் இக் கருத்தை அவர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள்.
தமிழ் நாட்டிற்கு வெளியேயுள்ள இந்திய மாநிலங்களின் ஆதரவை இனப்பிரச்சினை விவகாரத்தில் பெற்றுத்தருவதாக உறுதி கூறியுள்ளனர். நீங்கள்; ஒருங்கிணைந்து செயற்படுங்கள் “உங்கள் விவகாரத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்கின்றோம்” என அவர்கள் கூறியிருந்தனர். பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ் மாநில மாணவர் அணியும் தமிழ் நாட்டிற்கு வெளியே இனப்பிரச்சினையைக் கொண்டு செல்வதாகக் கூறியுள்ளது.
ஐந்தாவது தமிழ் அரசியலில் அதிகாரச் சமநிலை ஒன்று வலுவாகத் தோன்றியுள்ளமையாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கட்டுப்படுத்துகின்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை மணிவண்ணன் அணி கட்டுப்படுத்துகின்றது. அனைத்து தமிழ்த்தேசியக் கட்சிகளையும் தாயகத்திலுள்ள சிவில் அமைப்புகளும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் கட்டுப்படுத்துகின்றன. இந்தச் சுழற்சி தமிழ் அரசியலில் ஒரு அதிகாரச் சமநிலையை உருவாக்கியுள்ளது. இதன் விளைவு எவருமே மொத்த விஜாபாரம் செய்ய முடியாது என்பது தான்.
விடுப்புப் பார்த்தல் என்ற தமிழ் மக்களின் கிராமிய பண்பாடு வளர்ச்சி கண்டுள்ளது. இதனால் அனைத்து தமிழ் அமைப்புக்களும் தங்கள் நகர்வுகளில் சற்று கவனமாக இருக்கின்றன. புவிசார் அரசியல் காரரினாலும், பூகோள அரசியல் காரர்களினாலும், சிங்களத் தரப்பினாலும, தமிழ் கட்சிகளை முழுமையாக விலைக்கு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் உருவாக்கிய தேசிய சபையில் ஒரு தமிழ்த் தேசியக் கட்சியும் அங்கம் வகிக்க முன்னவரவில்லை என்பது இதற்குச் சிறந்த உதாரணமாகும். இந்தியா 13வது திருத்தத்தை எவ்வாறாவது தமிழ் மக்களிடம் விற்க முனைகின்ற போதும் அது பெரியளவிற்கு வெற்றியளிக்கவில்லை.
ஆறாவது புலம்பெயர் தமிழ் மக்கள் முதல்
நிலை பேரம்பேசும் சக்திகளாக மாறியுள்ளமையாகும் இராணுவக் குறைப்பு, முதலீடுகள் உள்வருக,  சர்வதேச மயமாக்கல்  என்பன புலம்பெயர் தமிழ் மக்களை இனப்பிரச்சினை விவகாரத்தில் முதல்நிலை பேரம் பேசும் சக்தியாக மாற்றியுள்ளது. தாயகத்தில் உள்ளவர்களை கட்டுப்படுத்துவது போல புலம்பெயர் தமிழ் மக்களை கட்டுப்படுத்தவும் முடியாது. அந் நாடுகளின் ஜனநாயக விழுமியங்களும் அதற்கு இடம்கொடுக்காது. தற்போது தாயகத்திலுள்ள பிரதிநிதித்துவ அரசியல் சக்திகளிடம் பேரம் பேசும் பலம் பெரிதாக இல்லை.
ஏழாவது மகிந்தரின் மீளெழுச்சியாகும். “சாம்பலில் இருந்து மீண்டெழுவோம்” என மகிந்தர் பிரகடனம் செய்துள்ளார். ரணில் அரசாங்கத்தில்; மகிந்தரின் பிடி குறைந்து வருவதால் மக்களிடம் செல்வதைத் தவிர வேறு தெரிவு அவருக்கு இல்லை. பெரும் தேசியவாதத்திற்கும் மகிந்தரை விட்டால் வேறு தெரிவில்லை. எனவே பெரும் தேசியவாதத்தின் தேவையும் மகிந்தரின் தேவையும் விரைவில் அவற்றிற்கிடையே இணைவை ஏற்படுத்தும் சாத்தியங்கள் உண்டு. சாம்பலில் இருந்து மீண்டெழுவது மகிந்தருக்கு புதிதல்ல. சீனாவின் வலுவான ஆதரவும் அவருக்கு உண்டு. முழுமையாக சீனா பக்கம் அவர் சரிந்துவிடக் கூடாது என்பதற்காக இந்தியாவும் தன்பங்கிற்கு ஆதரவினை வழங்க முற்படும.; இராணுவத்திற்கும் அவரைத் தவிர வேறு தெரிவு இல்லை. இவை எல்லாம் சேர்ந்து மகிந்தரை சாம்பலில் இருந்து மீண்டெழ வைக்கும்.

ரணிலைப் போல மகிந்தரும் மூலோபாயத்தில் மட்டும் நம்பிக்கை வைப்பதில்லை மாறாக தந்திரோபாயத்திலும் பலத்த நம்பிக்கை வைத்துள்ளார். ரணிலை லிபரல் நரி என்றால் மகிந்தரை பெரும் தேசியவாத நரி எனலாம். எனவே அவர் எப்பாடு பட்டாவது மீண்டௌ முயற்சிப்பார். இதற்கான முயற்சிகள் களுத்துறையில் தொடங்கி நாவலப்பிட்டியூடாக புத்தளம் என வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளன.
மகிந்தர் மீண்டெழ, மீண்டெழ ஏனைய எதிர்த்தரப்புக்களும் போராட்டங்களை நடாத்தத் தொடங்கும். எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் நவம்பர் 02ம் திகதி போராட்ட தினத்தை அறிவித்துள்ளன. இந்நிலையில் தமிழ் மக்கள் மத்தியிலும் போராட்டங்கள் எழுச்சியடைந்தால் முழு இலங்கையுமே கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
தென்னிலங்கைப் போராட்டங்கள் தென்னிலங்கைக்குள்ளேயே முடங்கக்கூடியன. தமிழ் மக்களின் போராட்டங்கள் அவ்வாறானதல்ல. அது தமிழர் தாயகம்,  தமிழகம்,  புலம்பெயர் நாடுகள் என உலகம் முழுவதும் பரவத் தொடங்கும். இது இலங்கை ஆட்சியாளரை தர்மசங்கட நிலைக்கு உட்படுத்தும்.
எட்டாவது அரகலய போராட்டத்தின் கருத்துநிலை வளர்ச்சியாகும். அரகலய போராட்டம் சிங்கள தேசத்தின் இளம் தலைமுறையினர் மத்தியில் பொருளாதார நெருக்கடியின் வேரை ஆராய்கின்ற நிலையை தோற்றுவித்துள்ளது. அவ்வாறு ஆராய்ந்த போது வெளிப்படையாகத் தெரிந்த உண்மை இனப்பிரச்சினையே இதன் ஆணிவேர் என்பதாகும்.
இதனால் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அவர்களும் அக்கறைப்படத் தொடங்கியுள்ளனர். எனவே இந்த நிர்ப்பந்தங்களை எல்லாம் சரிவரத் தொகுத்து செயற்படுத்துவதற்கு தமிழ் மக்கள் தயாராக வேண்டும் அதற்கான வலுவான மூலோபாயங்களையும் தந்துரோபாயங்களையும் செயற்படுத்துவார்களேயானால் வெளிச்சம் வெகு தொலைவில் இருக்கப்போவதில்லை. இத விடயத்தில் வரலாறு எப்போதும் சந்தர்ப்பங்களைத் தருவதில்லை என்பதை மறக்கக்கூடாது.

Recommended For You

About the Author: admin