தேர்தல் முறை மாற்றம் எவரின் நலன்களுக்காக? அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

பாராளுமன்ற தேர்தல் முறைமை தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு தெரிவுக்குழு ஒன்று பரிந்துரைக்கப்படும். அந்தத் தெரிவுக்குழுவினால் அடுத்த வருடம் யூலை மாதத்திற்குள் தீர்மானமொன்று முன்வைக்கப்படாவிட்டால் பொருத்தமான தேர்தல் முறைமை ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படும். உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் 8000 இலிருந்து 4000 ஆக குறைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொழில்சார் வல்லுனர்களுடன் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது கூறியிருக்கின்றார்.  விருப்புவாக்கு முறையினால் ஏற்படும் பாதிப்புக்கள், தேர்தலுக்கு செலவிடப்படும் அதிக பணம் என்பன பற்றியும் கூறி அவற்றிலும் மாற்றங்கள் தேவை என்கின்றார்.
முழுமையான பட்டியல் முறைக்கோ, அல்லது கலப்பு முறைக்கோ, செல்வது பற்றி யோசிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார்.
தேர்தல் முறை மாற்றம் பற்றிய ரணிலின் கருத்துக்கு அது பற்றிய அக்கறை காரணமல்ல,  மாறாக தேர்தல் ஒன்று வருமாயின் தனது அதிகார இருப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்ற விடயமே காரணமாகும் என பலர் வாதிடுகின்றனர்.
தற்போதுள்ள அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடையாது. மக்கள் அரசாங்கத்தின் மீது கடுமையான வெறுப்பில் உள்ளனர். தேர்தல் ஒன்று வருமாயின் ரணிலினதும் அவரைத் தாங்கிப்பிடிக்கின்ற மொட்டுக் கட்சினதும் செல்வாக்கு பரியளவில் வீழ்ச்சி அடையும்.  இதனால் தேர்தல் வருவதைத்தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் ரணில் தேர்தல் முறை மாற்றம் பிரச்சினையை கிளப்பியுள்ளார். என விமர்சிக்கப்படுகின்றது.
இந்த விமர்சனங்களில் நிறைய உண்மைகள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. தேர்தல் முறை மாற்றம் ஒன்று வருமாயின் அது யாருடைய அரசியலில் தாக்கத்தை செலுத்தும் என்கின்ற விவாதமும் இன்று கவனத்திற்குள்ளாகியுள்ளது.
விகிதாசார பிரதிநிதித்துவத் தேர்தல் முறை 1978 ம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. சார்பு ரீதியான பெரும்பான்மைத் தேர்தல் முறையிலுள்ள ஜனநாயகக் குறைபாடுகளே மாற்றத்திற்கு காரணமாக குறிப்பிட்டது. குறிப்பாக ஒரு தேர்தல் தொகுதியிலிருந்து பெரும்பான்மை வாக்காளர் விரும்பாத ஒருவர் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட வாய்ப்பிருக்கின்ற நிலையும், நாடு தழுவிய ரீதியில் கட்சிகள் பெறுகின்ற வாக்குகளின் வீதத்திற்கும் பாராளுமன்றத்தில் அவை பெறும் ஆசனங்களின் வீதத்திற்கும் இடையே ஏற்படுகின்ற முரண் நிலையும் பிரதான குறைபாடுகளாக சுட்டிக் காட்டப்பட்டது.

குறைபாடுகள் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்ட போதும் அன்று ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஐக்கிய தேசியக்கட்சி தொடர்ந்து ஆட்சியிலிருக்க வேண்டும் என்பதற்காகவும் , தான் உருவாக்கிய அரசியல் யாப்பின் தொடர்ச்சியை நிலைநிறுத்துவதற்காகவும் இதனை அறிமுகப்படுத்தியதாக விமர்சிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் பட்டியல் முறையே பின்பற்றப்பட்டது. மாநகரசபைத் தேர்தல்கள், மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல்கள் என்பவற்றில் முழுமையான பட்டியல் முறையிலேயே  இடம் பெற்றன. 1988 ம் ஆண்டு பட்டியல் முறையுடன் இணைந்த வகையில் விருப்பு வாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு கட்சியிலுள்ள மூன்று வெவ்வேறு மூன்று வேட்பாளருக்கு மூன்று விருப்பு வாக்குகளை அளிக்க ஒழுங்கு செய்யப்பட்டது. உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் மூன்று விருப்பு வாக்குகளையும், ஒரு வேட்பாளருக்கு வழங்க அனுமதிக்கப்பட்டது.
இந்தத் தேர்தல் முறை எண்ணிக்கையில் குறைவான, அதே வேளை சிதறி வாழும் இனங்களுக்கும் சிறிய கட்சிகளுக்கும், வாய்ப்பாக அமைந்தது. ஒரு வகையில் கூறுவதானால் எண்ணிக்கையில் குறைந்த இனங்களையும் , சிறிய கட்சிகளையும், ஒரு அரசியல் சக்தியாக்கியது எனலாம். அவை கணிசமான ஆசனங்களைப் பெற்றன.
மறுபக்கத்தில் தனித்து ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியாத சூழல் அதிகம் இருந்ததினால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டது. பேரம் பேசக்கூடிய சூழலும் ஏற்பட்டது.
வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களுக்கு இந்தத் தேர்தல் பயன்களைத் தந்தது எனக் கூற முடியாது.
மாறாக நட்டங்களைத் தந்தது என்றே கூறலாம். வன்னியிலும், மட்டக்களப்பிலும்,  தங்களுக்குரிய ஆசனங்களை இழக்கவேண்டி ஏற்பட்டது.
தொகுதிவாரி தேர்தல் முறை இருந்திருக்குமானால்,  வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைக் கூட முஸ்லீம்கள் பெற்றிருக்க முடியாது. அதிஸ்டவசமாக மன்னார் தேர்தல் தொகுதியில் ஒரு தடவை முஸ்லீம் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டாலும் சாதாரண காலங்களில் அதற்கான வாய்ப்புக்கள் இருக்கவில்லை. தற்போது தனித்துவ கட்சியிலிருந்தும்,  தென்னிலங்கைக் கட்சியிலிருந்தும் இருவர் தெரிவுசெய்யப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தென்னிலங்கைக் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்டவருக்கு சகல இனங்களினதும் வாக்குகள் துணைபுரிந்தன.
ஒரே ஒரு தடவை சிங்கள உறுப்பினரும் தெரிவுசெய்யப்பட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொகுதிவாரி முறையில் ஒரு முஸ்லீம் உறுப்பினரே தெரிவு செய்யப்படக்கூடிய நிலை இருந்தது. மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியிலிருந்தே ஒருவர் தெரிவுசெய்யப்படக்கூடிய வாய்ப்பு இருந்தது. கல்குடா தொகுதி முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவமே கிடைக்கவில்லை.
உண்மையில் இந்த விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை முஸ்லீம்களுக்கும், மலையக மக்களுக்குமே சாதகமாக இருந்தது எனலாம்.
வடக்கு – கிழக்கில் சிங்களவர்களுக்கும் சாதகமாக இருந்தது எனலாம். முஸ்லீம் மக்களை இந்த தேர்தல் முறையின் மூலமே அஸ்ரப் ஒரு அரசியல் சக்தியாக்கினார். நீண்ட யுத்தமும் அவருக்கு வாய்ப்புக்களைக் கொடுத்ததினால் அரசாங்கத்தில் பேரம் பேசும் சக்தியாகவும் மாறினார்.
ஒலுவில் துறைமுகம், தென்கிழக்கு பல்கலைக்கழகம், கல்முனை வைத்தியசாலை என்பவை உருவாகுவதற்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தினார். வடக்கு –கிழக்கிற்கு வெளியிலும் ஆசனங்களை அதிகரிப்பதற்கு இத் தேர்தல் முறை களுத்துறை முஸ்லீம்களுக்கு உதவியிருந்தது. கேகாலை மாவட்டத்திலிருந்தும், களுத்துறை மாவட்டத்திலிருந்தும், பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்புக்கள் உருவாகியது. முன்னர் கொழும்பிலும், கண்டியிலும், புத்தளத்திலும் தவிர ஏனைய இடங்களில் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கவில்லை.
விகிதாசார தேர்தல் முறை புத்தளம் மாவட்டத்தில் அதன் பிரதிநிதித்துவத்தைப் பலவீனப்படுத்தியது என்பது வேறுகதை. மலையக மக்களைப் பொறுத்தவரை பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்னர் மலையகத்தில் ஏழு பிரதிநிதிகளைப் பெற்றிருந்தனர்.
பின்னர் அனைத்தும் நீண்ட காலத்திற்கு இல்லாமல் போயின. மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை வழங்கப்பட்ட பின்னர் 1977ம் ஆண்டு தேர்தலில் நுவரெலியா, மஸ்கேலியா – தேர்தல் தொகுதியிலிருந்து மூன்றாவது பாராளுமன்ற உறுப்பினராக தொண்டமான் தெரிவுசெய்யப்பட்டார்.
ஏனைய மாவட்டங்களில் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் வாய்ப்பு இருக்கவில்லை.
விகிதாசாரத் தேர்தல் முறை நுவரெலியா, கண்டி, பதுளை என அவர்களுடைய பிரதிநிதித்துவத்தை அதிகரித்தது. இந்தத் தேர்தல் முறை இல்லையேல் கண்டியிலும் பதுளையிலும் பிரதிநிதித்துவத்தை எதிர்பார்க்க முடியாது. சற்று முயற்சி செய்தால் இரத்தினபுரி மாவட்டத்திலும் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இன முரண் பாட்டைத் தவிர்ப்பதற்காகவும் , வெட்டுப்புள்ளி நெருக்கடிக்காகவும், சிங்கள பெரும் கட்சிகளின் சின்னங்களிலேயே மலையகக் கட்சிகள் போட்டியிடுவதுண்டு. இதற்கு புறம்பாக சந்திரசேகரன் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார் என்பதும் வரலாறு. பேரம் பேசலை அதிகரித்தால் சிங்களப் பெரும் கட்சிகளின் தேசியப் பட்டியலிலிருந்தும் ஆசனங்களைப் பெறலாம். பல தேர்தல்களில் அவ்வாறு ஆசனங்களையும் பெற்றிருந்தனர்.
மாகாணசபைத் தேர்தல்களில் கேகாலை, மாத்தளை மாவட்டங்களிலும் மலையக மக்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்தது. சற்று முயற்சி செய்தால் களுத்துறை மாவட்டத்திலும் பெற்றுக்கொள்ளலாம். மலையக மக்களிடம் ஏற்கெனவே தொழிற்சங்கப்பலம் இருந்தது. தற்போது அரசியல் பிரதிநிதித்துவப் பலமும் இருக்கின்றது. இரண்டையும் இணைக்கின்றபோது வலுவான அரசியல் சக்தியாக மாறலாம்.
விகிதாசார முறையினால் ஏற்பட்ட இன்னோர் நன்மை கொழும்பு மாவட்ட தமிழ் மக்களுக்கும், பிரதிநிதித்துவம் கிடைத்தமையாகும். சுதந்திரமடைந்த காலத்திலிருந்து கொழும்பு தமிழ் மக்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. கொழும்பு மத்தி மூன்று அங்கத்தவர் தேர்தல் தொகுதியாக இருந்தபோதும், விகிதாசார தேர்தல் அறிமுகமாகும் வரை பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.
தமிழ் மக்கள் செறிவாக வாழ்கின்ற பிரதேசங்கள் கொழும்பு மத்தி, கொழும்பு வடக்கு எனப் பிரிக்கப்பட்டதனாலும்,  கொழும்பு மத்தியில் வாழ்ந்த தமிழர் பலருக்கு வாக்குரிமை இல்லாதினாலும் , தமது மூன்று வாக்குகளையும், பிரசித்திபெற்ற அரசியல் பிரமுகர் பிரேமதாசாவுக்கு அளிக்கும் மரபைக் கொண்டிருந்ததினாலும், தமிழ்ப் பிரதிநிதி ஒருவர் தெரிவுசெய்யப்படுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கவில்லை.
1977ம் ஆண்டு தேர்தலில் செல்லச்சாமி இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோதும் நான்காவது நிலைக்கே வரமுடிந்தது. கொழும்பில் வாழ்ந்த வடக்கு – கிழக்கு தமிழர்கள் தேர்தல்களில் அக்கறையற்று இருந்ததும் ஒரு காரணம் எனலாம்.
இந்தக் குறைபாட்டை விகிதாசார தேர்தல் முறையே தீர்த்துவைத்தது. இந்தத் தேர்தல் முறையின் கீழ் 1989ம் ஆண்டு முதன் முதலாக செல்லச்சாமி தெரிவுசெய்யப்பட்டார். இடையில் ஒரு தடவை மகேஸ்வரனும் தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து யோகராஜன், தேவராஜாவும், பின்னர் மனோகணேசனும்  தெரிவுசெய்யப்பட்டனர். இந்தப் போக்கில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியவர் மனோகணேசன் தான்.
கொழும்பு மாவட்டத்தில் வாழ்ந்த வடக்கு – கிழக்குத் தமிழர், மலையகத் தமிழர், கொழும்புத் தமிழர் என்ற மூன்று வகைப் பிரிவினரதும் நலன்களை பேணக்கூடிய ஒரு அரசியலைப் பின்பற்றியவர் மனோகணேசன் தான்.
கொழும்பு மாவட்டப் பிரதிநிதி ஒருவருக்கு அது ஒரு தலைநகராக இருப்பதனால் வடக்கு – கிழக்கு, மலையகம், கொழும்பு என மூன்று பிரிவினர்களின் நலன்களுக்காகவும் குரல்கொடுக்க வேண்டிய பொறுப்பு இருந்தது. மனோகணேசன் தனது சக்திக்கு உட்பட்ட வகையில் அந்தப் பணியை திறம்பட ஆற்றினார் என்றே கூறவேண்டும்.
போர்க்காலங்களில் கொழும்பில் வசிக்கும் வடக்கு – கிழக்குத் தமிழர்களுக்கு ஒரு பாதுகாவலனாகவும் அவர் விளங்கினார். பல நெருக்கடிகளைச் சந்தித்தபோதும் அவர் தனது குரலைக் குறைக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் வடக்கு – கிழக்கு தமிழ்ப் பிரதிநிதிகளை விடவும் வலுவாகக் குரல் கொடுத்தார்.
உண்மையில் நுணுக்கமாக ஆராய்வோமாயின் கொழும்பு வாழ் தமிழர்களை ஒரு அரசியல் சக்தியாக்கியதும் விகிதாசார தேர்தல் முறைதான். இன்று கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் கட்டிடங்கள் உயர்ந்திருக்கின்றதென்றால் அதற்கும் பிரதான காரணம் விகிதாசார தேர்தல் முறையும் , அதன் வழிவந்த தமிழ் பிரதிநிதித்துவமும் தான்.
கலப்புத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுமானால் மலையக மக்களும், முஸ்லீம் மக்களும், கொழும்புத் தமிழ் மக்களும், கடுமையாகவே பாதிக்கப்படுவர்.
மலையக மக்களுக்கு நுவரெலியா மாவட்டத்தைத் தவிர வேறு எங்கும் பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்படும். தேர்தல் தொகுதி உருவாக்கத்தின் போது தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை துண்டு துண்டாக வெட்டுவதற்கே வாய்ப்புக்கள் அதிகம்.
கொழும்புத் தமிழர்களுக்கும், பிரதிநிதித்துவம் எதுவும் கிடைக்காது. தற்போது கூட கொழும்பு வாழ் மலையக மக்களில் பலர் வத்தளை , மாபொல பகுதிகளில் குடியேறுவதால் மனோ கணேசனின் வாக்கு வங்கி சரிந்துள்ளது. மிகவும் சிரமப்பட்டே தனது பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க முனைகின்றார்.
கொழும்புத் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கா விட்டால் கொழும்புத் தமிழ் அரசியல் மட்டுமல்ல  மலையக , வடக்கு – கிழக்கு தமிழ் அரசியலும் பலவீனமடையக் கூடிய நிலை ஏற்படலாம்.
இன்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் உருவாக்கத்தின் பின்னர் மலையக மக்களின் அரசியல் பலம் அதிகரித்துள்ளது. அந்தப் பலத்திலும் தொய்வு ஏற்படலாம்.
முஸ்லீம் மக்களின் பிரதிநிதித்துவமும் குறைவதற்கே வாய்ப்புகள் உண்டு. கிழக்கு மாகாணத்திலும் , கொழும்பு , கண்டி போன்ற பிரதேசங்களிலும் முஸ்லீம்கள் தங்களது பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கலாம் ஏனைய இடங்களில் பாதுகாக்க முடியாது.
வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்த தேர்தல் முறை வந்தாலும் பெரிய பாதிப்புக்கள் வரப்போவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று வடக்கு – கிழக்கு தமிழ் பிரதேசங்களில் பெரும்பாலானவை தனித்து தமிழ் மக்களைக் கொண்ட பிரதேசங்கள். இதனால் பிரதிநிதித்துவ எண்ணிக்கையில் பெரிய வீழ்ச்சி வரப்போவதில்லை. திருகோணமலையிலும் , அம்பாறையிலும் சில சங்கடங்கள் வரலாம். இரண்டாவது இன்று தமிழ் அரசியலின் பெரும் பகுதி பிரதிநிதித்துவ அரசியலுக்கு வெளியிலேயே உள்ளது.
பிரதிநிதித்துவ அரசியலால் கிடைக்கும் பயன்கள் மிகச் சொற்பமே!
ஆனாலும் தமிழ் மக்களுக்கு முஸ்லீம் , மலையக மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் துணைப் பொறுப்பும் உண்டு. எனவே தேர்தல் முறை மாற்றத்திற்கு வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் ஒரு போதும் துணை போகக் கூடாது. தவிர பெருந்தேசிய வாதத்தை பலவீனப்படுத்துவதிலும் கணிசமான பங்கு இத் தேர்தல் முறைக்கு உண்டு என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
ஜே.வி.பி. போன்ற சிறிய கட்சிகளுக்கும் தற்போது பேசப்படுகின்ற கலப்பு தேர்தல் பாதிப்பை உருவாக்கும். ஒரு பிரதிநிதியைக் கூட தெரிவு செய்ய முடியாத நிலை வரலாம். அதனால் இத்தேர்தல் முறை மாற்றத்திற்கு அவையும் சம்மதிக்க மாட்டா.

Recommended For You

About the Author: Editor Elukainews