![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/08/21-611e26268eabd-sm.webp)
கொரோனா தாக்கத்தினால் நாட்டு மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் அரசியல்வாதிகள் கொழும்பில் இருந்து கொண்டு அரச வரப்பிரசாதங்களை அனுபவிக்காமல் தமக்குரிய பிரதேசங்களுக்கு சென்று மக்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், மக்கள் மாத்திரம் அல்ல அரசியல் வாதிகளும் பொறுப்புடனும், விட்டுக்கொடுப்புடனும் செயற்பட வேண்டும். அரசாங்கம் இன்று பலவீனமடைந்துள்ளது. ஆலோசனை வழங்கி இனி பயன் இல்லை.
கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் பல்வேறு தரப்பினர் விமர்சிக்கின்றார்கள். தவறுகளை திருத்திக்கொண்டு சிறந்த முறையில் பயணிக்க வேண்டும் என ஆட்சியாளர்களுக்கு பல முறை ஆலோசனை வழங்கியுள்ளோம்.
ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் செயற்படுகிறார்கள். ஆகவே இனி ஆலோசனை வழங்குவது பயனற்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாட்டு மக்கள் பொறுப்புடனும் விட்டுக்கொடுப்புடனும் செயற்பட வேண்டும் என அரசியல்வாதிகள் குறிப்பிடுகின்றார்கள்.
நாட்டு மக்கள் பல வற்றை தியாகம் செய்து விட்டார்கள் அரசியல் வாதிகளும் தியாகம் செய்யவேண்டும். தற்போதைய நெருக்கடியான நிலையில் அரசியல்வாதிகள் கொழும்பில் இருந்து அரச வரப்பிரசாதங்களை அனுபவித்துக்கொண்டு தேவையற்ற விடயங்கள் தொடர்பில் கருத்துரைக்கின்றார்கள்.
அரசியல்வாதிகள் அனைவரும் தம்மை தெரிவு செய்த மக்களுக்கு உள்ள பிரதேசங்களுக்கு சென்று அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய வேண்டும்.
அதுவே சிறந்தது. அரசாங்கத்தை நம்பி இனி பயனில்லை. விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுகின்றது.
ஆகவே சுனாமி, யுத்தம் ஆகிய காலங்களில் நாட்டு மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செயது கொண்டார்கள். தற்போதைய நிலையை ஒரு அனர்த்த நிலையாக கருதி வசதி படைத்தவர்கள், இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.