இலங்கை மக்களுக்கு ஏற்படவுள்ள உயிராபத்தான அபாயம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமிந்தி சமரகோன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவிய காலத்தில், வீட்டிலேயே இறந்து, தினமும் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட நோயாளிகளில் 10-15 பேராகும். அவர்கள் மாரடைப்பால் இறந்தமை உறுதி செய்யப்பட்டது.

தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்ளும் போது இதுபோன்ற போக்கு ஏற்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.

பல நோயாளிகள் மருந்துப் பற்றாக்குறை மற்றும் அவற்றின் அதிக விலைகள் காரணமாக தினசரி மருந்துகளை உட்கொள்வதைக் குறைத்துள்ளதால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொற்றாத நோய்களினால் இறப்பவர்களில் 34 வீதமானவர்கள் மாரடைப்பினால் இறப்பதாகவும் எதிர்காலத்தில் இந்நிலை மேலும் அதிகரிக்கலாம் எனவும் வைத்தியர் சமரக்கோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சத்தான உணவு கிடைப்பதில் சிக்கல், மன உளைச்சல், நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ வேண்டிய நிலை போன்றவை தொற்றாத நோய்களின் எண்ணிக்கையையும், புதிதாக நோய்க்குள்ளாகுபவர்களும் அதிகரிக்கச் செய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin