குருந்தூர் மலையில் ஆர்ப்பாட்டம் – ரவிகரன், மயூரன் ஆகியோர் கைது.

குருந்தூர் மலையை அண்டிய தமிழர் நிலங்கள் தொல்லியல் திணைக்கத்தால் அபகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டமையை கண்டித்து  நேற்றைய தினம் (21) முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் போராட்டம் மேற்கொண்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் குமுளமுனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவரும், காணி அபகரிப்புக்கு எதிரான போராட்ட குழுவின் தலைவருமான இரத்தினராசா மயூரன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு பேரையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்த பொலிஸார் விசாரணையை மேற்கொண்ட பின்னர் கைது செய்த்துள்ளனர். தொல்லியல் திணைக்களத்தினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீகக் காணிகளைத் தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும் நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால்  நேற்று குருந்தூர்மலையில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குருந்தூர் மலை அடிவாரத்தில் ஒன்றுகூடிய மக்கள், பல பதாதைகளைத் தாங்கியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து குருந்தூர் மலையின் மேற்பகுதிக்குச் சென்ற மக்கள் அங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

முல்லைத்தீவு நீதிவான் சரவணராஜா கடந்த 19.06.2022 அன்று குருந்தூர்மலைக்கு விஜயம் செய்து, இதற்கு மேல் கட்டுமானப்பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது எனக் கட்டளை பிறப்பித்திருந்தார்.

இருப்பினும் தற்போதும் அங்கு நீதிமன்றத்தின் கட்ளையை மீறி பௌத்த கட்டுமானப்பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அங்கு மேலதிக கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுக் காணப்படுவதுடன், அங்கு கட்டுமானத்துக்குப் பயன்படுத்துவதற்குத் தயாரான நிலையில் கலவை செய்யப்பட்ட சீமெந்து மற்றும் கட்டுமானப் பணிகளுக்குரிய பொருட்களும் அங்கு காணப்பட்டன.

அத்தோடு அங்கு மீண்டும் பௌத்த கண்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் ஆர்ப்பாட்டக்கார்களால் தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.  இதன்போது அங்கு  சலசலப்பும் தோன்றியது. இந்நிலையில் அங்கு பெருமளவில் ஆயுதங்கள் தாங்கிய பொலிஸார் குவிக்கப்பட்டடதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்துகின்ற வகையில் பொலிஸார் புகைப்படங்களையும் எடுத்தனர்.

பொலிஸாரின் இத்தகைய நடடிக்கையைக் கண்டித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், குருந்தூர்மலையில் கட்டுமானப் பணிகள் எதுவும் மேற் கொள்ளப்படக்கூடாது  என்ற நீதிமன்றக் கட்டளையை நடைமுறைப்படுத்துமாறும் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிரிதரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஜோன்சன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin