வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 11 பேர் கைது

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும், சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தமை உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு இந்தத் தகவலை இன்று(31) வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான தாரக பாலசூரிய, ரோஹித குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் வீடுகள் மீது தாக்குதல் நடத்திய பெண் ஒருவர் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களைக் கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்கவின் வீட்டைத் தாக்கிய சந்தேகநபர் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோவின் வீட்டை தாக்கிய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மாத்தறை பிரதேச சபையின் தவிசாளரின் வீட்டுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பில் இருவரும், எலஹெர பிரதேச சபை தவிசாளரின் சொத்துக்களைச் சேதப்படுத்தியமை தொடர்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin