இலங்கையின் நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் – உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்களை தடை செய்தமை உலகம் முழுவதும் அமைதியின்மையை ஏற்படுத்தியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சியோலில் நடந்த ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் தனது உரையின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய தந்திரோபாயங்களில் ஒன்று “பொருளாதார அதிர்ச்சியை” உருவாக்குவதாக ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இலங்கை ஒரு சிறந்த உதாரணமாகும்

விநியோகச் சங்கிலியில் நிலவும் நெருக்கடி மற்றும் சீர்குலைவு காரணமாக உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை நாடுகள் சந்திக்கும் நிலையில், அவை அமைதியின்மையில் வீழ்ந்துள்ளன. ரஷ்யாவின் நிகழ்ச்சி நிரலுக்கு இது பயனளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது எங்களுக்கு மட்டுமல்ல, இலங்கையில் நடந்த நிகழ்வுகள் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஒரு சமூக கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. அது எப்படி முடிவடையும் என்று இப்போது யாருக்கும் தெரியாது.

இருப்பினும், உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளிலும் இதேபோன்ற கிளர்ச்சிகள் ஏற்பட கூடிய சாத்தியம் உண்டு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews