இனியும் அமைதியாக இருக்கமாட்டேன்..! அடுத்தது நேரடி நடவடிக்கையாம், வடமாகாண அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு ஆளுநர் கெடு.. |

பாதிக்கப்பட்ட பொதுமக்களால் அல்லது அமைப்புக்களால் வடமாகாண அமைச்சுக்களுக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் அல்லது கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காத அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் விடயத்தில் இனியும் பொறுமையாக இருக்கமாட்டேன். என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா எச்சரித்துள்ளார்.

ஆளுநர் ஜீவன் தியாகராஜா அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அதனை அவர் கூறியிருக்கின்றார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

வடமாகாணத்தில் பொதுமக்கள் சேவையை அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும். அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் பொதுமக்கள் தமது தேவையை திருப்திகரமாக பெற்றுக் கொள்ளாமை தொடர்பாகவும்,

மற்றும் அமைச்சுக்கள் திணைக்களங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் தான்றோன்றித்தனமான செயற்பாடுகள் தொடர்பிலும் என்னிடம் பல முறைப்பாடுகள் நேரடியாக கிடைக்கப்பெற்றன. அவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் சிலவற்றுக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

அது தொடர்பிலும் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அரச சுற்று நிருபங்களுக்கு அமைவாக முறைப்பாடு வழங்கும் நபர் ஒருவருக்கு உரிய காலப் பகுதியில் தீர்வை முன்வைக்க வேண்டியது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கடமையாகும்.

அரச நிர்வாகம் பொது மக்களின் தேவைகளை இலகுபடுத்துவதற்காக கட்டியமைக்கப்பட்ட ஸ்தாபன அமைப்பாக காணப்படுகின்ற நிலையில் அதன் ஊடாக பொதுமக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்போதே குறித்த ஸ்தாபனம் மக்களின் நம்பிக்கையை வென்றதாக அமையும்.

வடமாகாணத்தில் செயற்பாடின்றி மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் எந்த ஒரு நிர்வாக கட்டமைப்பையும் ஆளுநர் என்ற நீதியில் அனுமதிக்கப் போவதில்லை. ஆகவே தான் வடமாகாணத்தில் இதுவரை அமைச்சுகள் திணைக்களங்களுக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில்

தீர்வு முன் வைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என ஆளுநர் எச்சரிக்கை விடுத்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews