பிரித்தானிய அரசின் புதுப்பிக்கப்பட்ட பயண அறிக்கை வெளியானது!

கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுக்கொண்ட பயணிகள் மற்றும் 18 வயதிற்குட்பட்டவர்கள் பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவிற்கு வரும் போது இனி தனிமைப்படுத்த மாட்டார்கள்.

அத்துடன், இந்தியாவும் சிவப்பு பட்டியலில் இருந்து ஆபத்தான நாடுகளில் பட்டியலில் (அம்பர் பட்டியல்) உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து மாற்றங்களும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட பயண அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தொடந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் நோர்வே உள்ளிட்ட ஏழு நாடுகள் பசுமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. எனினும், ஸ்பெயின் ஆபத்தான நாடுகளில் பட்டியலில் (அம்பர் பட்டியல்) இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஸ்பெயினில் இருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் தங்கியிருக்கும் தனி பயணிகளுக்கான செலவு ஆகஸ்ட் 12ம் திகதி முதல் 1,750 பவுண்ட்ஸிலிருந்து 2,285 வரை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு அறையைப் பகிரும் கூடுதல் வயது வந்தோருக்கான கட்டணம் 650 பவுண்ட்ஸிலிருந்து 1,430 ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, லாட்வியா, ருமேனியா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் பசுமை பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தடுப்பூசி நிலையைப் பொருட்படுத்தாமல் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை.

எனினும், அவர்கள் நாடு திரும்புவதற்கு முன்பும், வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகும் சோதனை செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா, பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் சிவப்பு பட்டியலில் இருந்து ஆபத்தான நாடுகளில் பட்டியலுக்கு (அம்பர் பட்டியல்) மாறும்.

ஆபத்தான நாடுகளில் பட்டியல் (அம்பர் பட்டியல்) நாடுகளிலிருந்து வரும் பயணிகள் வழக்கமாக வீட்டில் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். எனினும், 18 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் இங்கிலாந்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இப்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மெக்ஸிகோ, ஜோர்ஜியா, லா ரியூனியன் மற்றும் மயோட் ஆகிய நான்கு நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews