வன்செயல்களுடன் தொடர்புடைய 883 பேர் கைது!

கடந்த 09ம் திகதி இடம்பெற்ற நாட்டை உலுக்கிய வன்செயல்கள் தொடர்பில் இதுவரை 883 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) விசுவாசிகள் கொழும்பில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதனை தொடர்ந்து அமைதியின்மை வெடித்தது, பொது மக்கள் SLPP அரசியல்வாதிகள் மற்றும் விசுவாசிகளின் வாகனங்கள் மற்றும் வீடுகளை எரித்து பதிலடி கொடுக்க தூண்டியது.

தாக்குதல்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, இதுவரை மொத்தம் 883 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 412 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,

364 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவங்கள் தொடர்பில் நேற்று மாத்திரம் 219 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,

அவர்களில் 57 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு 68 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு தகவல் வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் ஊடாக 600 எச்சரிக்கைகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொதுமக்கள் அளித்த தகவலில் 475க்கும் மேற்பட்ட தாக்குதல் படங்கள் மற்றும் 70 வீடியோ கிளிப்புகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

தேவையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) உள்ளிட்ட விசேட பொலிஸ் பிரிவுகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews