ராஜபக்சவினரின் அரசியல் முடிவுக்கு வரும்:ராஜபக்சவினரின் முன்னாள் ஆஸ்தான ஜோதிடர் –

ராஜபக்சவினரின் அரசியல் முடிவுக்கு வரும் என ராஜபக்ச குடும்பத்தின் முன்னாள் ஆஸ்தான ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியல்வாதிகள் அனைவருக்கு் கட்டாயம் தோல்வி என்பது உண்டு. மகிந்த ராஜபக்ச 1977 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி தேர்தலில், டி.பி. அத்தபத்துவிடம் தோல்வியடைந்து 12 ஆண்டுகளாக வீட்டில் இருந்தார்.

1989 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். மகிந்த ராஜபக்சவின் தந்தை டி.ஏ. ராஜபக்ச 1965 ஆம் ஆண்டு தோல்வியடைந்து. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்து சாதாரண பொதுமகனாக இறந்து போனார்.

2015 ஆம் ஆண்டு ராஜபக்சவினர் தோல்விடைந்தனர். அண்ணன் தோல்வியடைந்ததால், அவரை பிரதானமாக கொண்ட ராஜபக்சவினர் தோல்வியடைந்தனர்.

எமது உன்னதமான பஞ்சீல கொள்கைகளை மீறியதே இதற்கு காரணம். அப்படி நடந்தால், எனக்கு மட்டுமல்ல பிரமமாவினாலும் வெற்றியை பெற்று தர முடியாது. நான் அவர்களுடன் இருந்ததால், அப்போது வாக்குகளாவது கிடைத்தது.

அனுராதபுரம் ஞானக்காவிடம் சேவையை பெற்றுக்கொண்டதன் காரணமாக 1936 ஆம் ஆண்டு டி.எம். ராஜபக்ச சட்டவாக்க சபை உறுப்பினராக ஆரம்பித்த ராஜபக்சவினரின் 86 ஆண்டு கால அரசியல் இம்முறை முடிவுக்கு வந்து விடும் என்பது மிக தெளிவாக தெரிய கூடியதாக இருக்கின்றது.

1982 ஆம் ஆண்டு முதல் மகிந்த ராஜபக்ச 21 ஆம் நூற்றாண்டி முதல் தசாப்தத்தில் நாட்டின் அரச தலைவராக பதவிக்கு வருவார் என அனைத்து ஊடகங்களிலும் ஜோதிட எதிர்வுகளை கூறிய ஒரே ஜோதிடன் நான்.

இது தாய் நாட்டு மக்களுக்கு நன்றாக நினைவிருக்கும். அதேபோல் அவர்களின் அரசியல் பயணமும் கட்டாயம் முடிவுக்கு வரும் என நானே கூறுவது விதி என நான் நினைக்கின்றேன் என சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

சுமணதாச அபேகுணவர்தன தனது முகநூல் பக்கத்தில் இட்ட இந்த பதிவு தற்போது அதில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. எனினும் சில சிங்கள ஊடகங்கள் அதனை முன்கூடியே பிரதி எடுத்து செய்திகளை வெளியிட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews