பிப்ரவரி 4, தமிழ் தேசிய மக்களின்  வரலாற்றில் மறக்கமுடியாத கரிநாளாகும்….!திருமதி கருணாவதி பத்மநாதன்.!

ஆங்கிலேயர்களின் ஆதிக்கப்பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட இலங்கைத்தீவு” தமிழர்களின் மீது இனவழிப்பை கட்டவிழ்த்துவிட்ட நாள். ஈழத்தமிழர்களின் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நாள்.என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன்  தெரிவித்துள்ளார்
நேற்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்தி குறிப்பிலேயே  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கடந்த ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் தமக்கே உரித்தான தனித்துவமான மொழி, கலசாரம், பொருளாதாரம் என்வற்றுடன் தம்மைத் தாமே தனியரசாக ஆண்ட தமிழினம் 1505ஆம் ஆண்டில் இத்தீவில் காலடி வைத்த போர்த்துக்கேயர்களிடமும், அவர்களை தொடர்ந்து வந்த ஒல்லாந்தர்களிடமும் தனது ஆட்சியதிகாரத்தின் ஒரு பகுதியை இழந்ததுடன் 1796 இல் இலங்கைத் தீவில் காலடி வைத்த ஆங்கிலேயர்களிடம் கடைசித் தமிழ் மன்னன் பண்டாரவன்னியனின் வீழ்ச்சியோடு ஒட்டுமொத்த தமிழ் இராட்சியங்களும் வீழ்ச்சியடைந்தது.
அதே போன்று தீவின் தென்பகுதியை ஆண்ட சிங்கள மன்னர்களும் தோற்கடிக்கப்பட்டு தீவு முழுவதும் ஆங்கிலேயர்களின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1833ஆம் ஆண்டு வரை வடக்கு கிழக்கை தனி நிர்வாகமாகவும், தென்பகுதியை வேறு நிர்வாகமாகவும் நிர்வகித்து வந்த ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிகருதி இலங்கைத் தீவு முழுவதனையும் 1833ஆம் ஆண்டு ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தனர்.
தமது நிர்வாக வசதிக்காக நாடு முழுவதனையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த ஆங்கிலேயர்கள் 1948ஆம் ஆண்டு இத் தீவை விட்டு வெளியேறும் போது வடக்கு கிழக்கு தமிழர்களின் ஆட்சியதிகாரத்தினை தமிழர்களிடம் கையளிக்காமல் தீவு முழுவதைனையும் ஆளும் அதிகாரத்தை சிங்கள பௌத்த பேரினவாதிகளிடம்  ஒப்படைத்துச் சென்று விட்டனர்.
அதனால் 1948ஆம் ஆண்டு முதல் தமிழர்கள் தம்மைத் தானே ஆளும் இறைமையை  சிங்களவர்களிடம் இழந்து அடிமைப்பட்டுக் கிடக்கின்றார்கள்.
தமிழர்களை அடக்கி அடிமைப்படுத்தியாளும் அதிகாரம் பிரித்தானியர்களது கைகளிலிருந்து பெரும்பான்மையினச் சிங்கள பேரினவாதிகளின் கைகளுக்கு உத்தியோக பூர்வமாக மாற்றப்பட்ட தினமே பெப்ரவரி 04 ஆகும்.
அயல் இராட்சியத்தைச் சேர்ந்த சிங்கள பௌத்த பேரினவாதிகள் தமிழ் மக்களை அடக்கியாளும் ஒற்றை ஆட்சியை கட்டவிழ்துவிட்டது.
இதனாலேயே இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக தமிழ் தலைவர்கள் பிரகடனப் படுத்தியதுடன், கடந்த ஏழு தசாப்தங்களாக சுநத்திர தினத்தை தமிழ் மக்கள் புறக்கணித்து வந்துள்ளனர்.
அதனை ஒர் போராட்டமாகவே தமிழ் தலைவர்கள் முன்னெடுத்து வந்துள்ளனர். அந்தப் போராட்த்தில் திருமலை நடராஜன் தனது இன்னுயிரை தியாகம் செய்தமையை நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் இருப்பை மதிக்காது தமிழர்களின் தாயகத்தை ஆக்கிரமித்து சிங்கள பௌத்த மயமாக்கல், மொழியையும் கலாசாரத்தையும் அழித்தல், வரலாற்றை திரிவுபடுத்தி அழித்தல், பொருளாதாரத்தை கொள்ளையடித்தல், கல்வியை அழித்தல் போன்ற செயற்பாடுகளே தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சிங்கள தேசத்தின் அடையாளங்களுக்குள் தமிழ் தேசத்தின் அடையாளங்களை கரைத்து தமிழ் தேசத்தின் இருப்பை அழித்து எமது தாயகத்தில் எமது மக்களை சிறுபான்மையினமாக மாற்றி சிங்கள பௌத்த பேரினவாதிகளிடம் கையேற்தி வாழும் நிலைக்குள் கொண்டுவரும் செயற்பாடுகளே கடந்த 74 வருடங்களாக திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது.
இச் செயற்பாடுகளை எதிர்த்து தமிழ் தலைவர்கள் ஐனநாயக வழியில் போராடினார்கள். தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடினார்கள். அந்த ஆயுதப் போராட்டம் இனவழிப்பு யுத்த மூலம் அழிக்கப்பட்டுள்ளது. அப்போராட்டம் தமிழ் தேசத்தின் மீதான கட்டமைப்புசார் இனவழிப்பை தடுத்து  பாதுகாக்கும் கவசமாக விளங்கியது. அந்த பாதுகாப்பு கவசம் நீக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசத்தின் இருப்பை சிங்கள பௌத்த பேரினவாதம் விரும்பிய வகையில் அழிக்கும் வேலையை தீவிரப்படுத்தியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலைகளானது சுதந்திரதினத்தை முன் எப்பொழுதும் இல்லாதாளவுக்கு கறுப்பு நாளாக அனுஸ்டிப்பது மட்டுமல்ல அன்றைய தினம் மக்கள் பல்லாயிரமாக திரண்டு வீதியில் நின்று எதிர்ப்பு போராட்டம் நடாத்த வேண்டிய தேவையை மேலும் அதிகரித்துள்ளது.
மேற்படி ஒடுக்கு முறைகளுக்கு எதிராக நீதி கேட்டுப் போராட வேண்டிய நிலையில் இந்த அழிப்புச் செயற்பாடுகளை நியாயப்படுத்தி எமது மக்களை விரும்பி ஏற்றுக் கொள்ளவைக்கும் முயற்சிகள் தமிழ் மக்கள் நம்பியவர்களால் முன்னெடுக்கப்படுவது என்பது மிகவும் ஆபத்தானது.
இந்நிலையில் மக்கள் தமது நிலங்களையும், மொழி, கலாசாரத்தையும், பொருளாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக போராட வேண்டும்.
யுத்தத்தின் முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இராணுவத்தினராலும், துணை இராணுவக் குழுக்களாலும் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும், யுத்தத்தின்போது இனவழிப்புச் செய்து கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும்,  அரசியல் கைதிகள் விடுதலை உறுதிப்படுத்தப்படவும்,
தமிழ் தேசத்தின் அங்கீகாரம் கிடைத்திடவும்  சிறீலங்காவின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஸ்டிக்குமாறு அறைகூவல் விடுக்கின்றோம். என அந்த தெய்திக்குறிப்பில் குறிப்படப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews