கம்பவாரிதியின் கருத்துக்கு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம்…..!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்துவ பயிற்சியை வழங்கலாம் என கூறிய கம்பவாரிதி இராணுவத்திற்கு வெள்ளையடிக்கும் வேலையை செய்கிறார்!  என யாழ்.பல்கலைக்கழக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் வசந் கண்டனம் தெரிவித்தார்.

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கம்பவாரிதி ஜெயராஜ் தெரிவித்த கருத்து தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய அரசாங்கத்தில் அரசியல் , சிவில் செயற்பாடுகள் மற்றும் பல்கலைக்கழகம் போன்றவற்றில் இராணுவ தலையீடுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகள் போராடி வரும் நிலையில்  இராணுவ முகாமில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியை வழங்குவதை வரவேற்று கருத்து தெரிவித்திருப்பது எமக்கு மன வேதனையைத் தருகிறது.

கொத்தலாவல இராணுவப்  பல்கலைக்கழகத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரும் செயற்பாட்டுக்கு எதிராக  இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழக விரிவுரையாளர்  சங்கம் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் என்பன ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில்  கம்பவாரிதியின் கருத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

கம்பவாரிதி பல்கலைக்கழக மாணவர்களின் தலைமைத்துவம் தொடர்பில் தெரிவித்த கருத்தையும் நாம் வன்மையாக கண்டிக்கிறோம். ஏனெனில்  பல்கலைக்கழகங்களில் தலைமை தாங்குபவர்களை அச்சுறுத்துவதும்,  அழுத்தங்கள் மூலம் அவர்களை அதிலிருந்து விலக்கிவைக்கும் செயற்பாடு அதிகம் இடம்பெற்று வருகிறது.

இதெல்லாம் அறியாதவர்கள் போல் கற்றறிந்த சமூகத்தில் இருப்பவர்கள் தெரிவித்த கருத்து பல்கலைக்கழக மாணவர்களை கொச்சைப்படுத்துவதாகவே பார்க்கிறோம்.

தலைமைத்துவம் ஏன் எமது சமூகத்தில் குறைவடைந்து செல்கின்றது என்பதை முதலில் அவர் ஆழமாக ஆராய வேண்டும். ஆகவே கம்பவாரிதியின் கருத்து தொடர்பில் ஏனைய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்களுடன்

கலந்துரையாடி எதிரான போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews